ராஜிவ் அழகானவர் என்பதால் திருமணம் செய்த சோனியா: சொல்வது பாக். முன்னாள் அமைச்சர்
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அழகானவர் என்பதாலேயே சோனியா காந்தி திருமணம் செய்து கொண்டார் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் இந்தியப் பயணம் குறித்து சோனியாவை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து தற்போது தான் எழுதியுள்ள "நெய்தர் எ ஹாக் நார் எ டவ்' என்ற புத்தகத்தில் குர்ஷித் கசூரி கூறியுள்ளதாவது:

சோனியா காந்தியுடன் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்னதாக காத்திருப்பு அறையிலேயே அவரைச் சந்தித்தேன். அவர் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்குடன் வந்திருந்தார்.
அப்போது, சோனியாவிடம் கை குலுக்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோஹைல் இப்திகாருடன் நான் நடைபயிற்சி சென்ற நிகழ்வுகளை நினைவுபடுத்த எண்ணினேன். (காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கத்தில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மியான் இஃப்திகாரின் மகன் சோஹைல்).
சோஹைலுடன் நான் நடைபயிற்சி செல்லும் போது எங்களுக்கு எதிர் திசையில் ஓர் அழகான இளைஞர் நடந்து வருவார். அவர் யார் என்று நான் கேட்டபோது, அவர் நேருவின் பேரன் ராஜிவ் காந்தி என்று சோஹைல் பதில் அளித்தார்.
இந்த நிகழ்வுகளை சோனியாவிடம் விவரித்து, ராஜிவ் காந்தியை அழகான இளைஞர் என்று நான் குறிப்பிட்டபோது, அவர் மிக இயல்பாக சிரித்துக் கொண்டே, அதனால்தான் ராஜிவை நான் திருமணம் செய்தேன் எனக் கூறினார்
இவ்வாறு தமது புத்தகத்தில் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications