எபோலா நோயை குணமாக்க மருந்து கண்டுபிடிப்பு! குரங்குகளின் உடலில் வேலை செய்ததாக அறிவிப்பு!!
டொராண்டோ: எபோலா வைரசை அகற்றும் மருந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. சோதனை கூடத்தில் 18 குரங்களுக்கு இந்த மருந்து பலனளித்து அவை குணமடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகி உலகை அச்சுறுத்தி வரும் மோசமான வைரஸ் கிருமி எபோலா. எபோலா பாதித்தவர்கள் உயிர் பிழைப்பது அரிது என்பதால், அனைத்து நாடுகளுமே தங்களது விமான நிலையங்களில் மருத்துவர் குழுவை நியமித்த தீவிர பரிசோதனை நடத்திய பிறகே வெளிநாட்டு பயணிகளை தாயகத்திற்குள் அனுமதிக்கின்றன.

இந்நிலையில் எபலா வைரஸ் நோய் தடுப்பு கிருமி ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு டாக்டருக்கு போட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். இதனால் எபோலா குறித்த அச்சம் அதிகரித்தது.
இந்நிலையில் கனடா நாட்டு ஆய்வு நிறுவனம் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளது. கனடாவின் பொது சுகாதார ஏஜென்சியை சேர்ந்த ஆய்வு குழு தலைவர் கேரி கோபின்கர் கூறுகையில், "எனது எதிர்பார்ப்பை மீறி மருந்து வேலை செய்து ஆச்சரியம் அளித்துவிட்டது" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
கனடா ஆய்வு கூடத்தில் எபோலா வைரஸ் செலுத்தப்பட்ட 18 குரங்குகள் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மனிதர்களுக்கும் இந்த மருந்து வேலை செய்து உயிரை காப்பாற்றும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எபோலா ஆட்கொல்லி நோய்க்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications