தாலிபன்களை விடுவிக்க கோரி தீவிரவாத தாக்குதல்.. பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் படுகொலை! உச்சகட்ட பதற்றம்
இஸ்லாமாபாத்: கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லபட்ட பாகிஸ்தான் தாலிபன் அமைப்பினரை சேர்ந்தவர்களை மீட்க சக தலிபான்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவர்கள் பல உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' எனும் அமைப்பு.
இந்த அமைப்பு தீவிர மத கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்த அமைப்பு பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன?
தாக்குதல்
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த அமைப்பை சேர்ந்த சிலரை பயங்கரவாத எதிர்ப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து விசாரணைக்காக ரகசிய இடங்களில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள பன்னு கன்டோன்மென்ட்டில் அமைந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபன்கள் தாக்குதலை நேற்று தொடங்கியுள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவ வீர்கள் சில உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் மீது சாரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
கோரிக்கை
மேலும், 15-20 பேரை பினைய கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றனர். இதில் மொத்தம் 7 தாலிபன் போராளிகள் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள் இருந்ததாக அவர்களை நேரில் பார்த்தவர்களும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் தாலிபன் அமைப்பினர் தாங்கள் இக்கட்டிடத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாலிபன் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக இருக்கிறது.
தொலைப்பேசி இணைப்பு துண்டிப்பு
இந்த தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாத எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தாலும், மொத்த எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தாலிபன்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், "சுபேதார் மேஜர் குர்ஷெத் அக்ரம் மற்றும் 8 பணியாளர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்" கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பினர் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும். அதேபோல பன்னு கன்டோன்மென்ட்டின் தொலைப்பேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தளபதி
அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (சென்ட்காம்) தளபதி ஜெனரல் மைக்கேல் பாகிஸ்தானுக்கு வந்துள்ள நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனிரை சந்தித்து பேசுவதற்காக ஜெனரல் மைக்கேல் பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார். பாகிஸ்தானின் கந்தகார் எல்லையில் பலுசிஸ்தான் அமைந்திருக்கிறது. இங்கு சாமன் எனும் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி அமைந்திருக்கிறது. இதன் வழியாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வழியாக வர்த்தக போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
தீர்வு
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தாலிபான்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இங்கிருந்ததுதான் பிரச்னை தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக்கு குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர். எப்படியாயினும் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் குழுவினரின் தாக்குதல் முயற்சியை பாகிஸ்தான் ராணுவத்தினர் முறியடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே அந்நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவி வருவதால், தற்போதைய பிரதமர் செபாஷ் செரிப் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்க இப்பிரச்னையிலிருந்து பின்வாங்க மாட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.