கிளம்பிய சில நொடிகளில் வெடித்து சிதறிய விமான என்ஜின்.. ஏர்போர்ட்டில் பகீர்.. அடுத்து என்ன நடந்தது
டொராண்டோ: ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய உடனேயே விமான என்ஜின் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பொதுவாகவே விமானங்கள் பாதுகாப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் மிக மிகப் பாதுகாப்பானதாகவே விமானங்கள் இருக்கின்றன.

இருப்பினும், அனைத்தையும் தாண்டியும் கூட சில நேரம் எதிர்பாராத விபத்துகள் நடந்துவிடுகின்றன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கனடா தலைநகர் டொராண்டோவில் நடந்துள்ளது.
கனடா விமானம்: கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 389 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் பாரிஸ் நோக்கிப் புறப்பட்டது. கிளம்பும் முன்பு வரை அங்கு எல்லாம் வழக்கம் போலவே இருந்துள்ளது. ஆனால், விமானம் பறக்கத் தொடங்கிய சில நொடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறி இருக்கிறது.
இதையடுத்து உடனடியாக விமானம் மீண்டும் திருப்பப்பட்டு டொராண்டோ விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. பைலட் சமயோஜிதமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தைத் தரையிறக்கியதால் உள்ளே இருந்த பயணிகள் பணியாளர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. ஜஸ்ட் மிஸ்ஸாகி இருந்தாலும் விமானம் மிக மோசமான விபத்தை எதிர்கொண்டு இருக்கும்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. போயிங் 777 ரக விமானம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு டொராண்டோ ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டது. நள்ளிரவு 12:39 மணிக்கு விமானம் கிளம்பிய நிலையில், திடீரென விமானத்தின் வலது எஞ்சினில் இருந்து தீப்பொறிகள் வந்துள்ளன.. இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை தங்கள் கேமராவில் பதிவு செய்துள்ளனர்.
அது தொடர்பான காட்சிகளே இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் சரியாகச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கி பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிய பைலட்கள், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
விபத்துகள் தொடர்கதை: அதேநேரம் போயிங் ரக விமானத்தில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் விமான நிறுவனங்கள் போயிங் ரக விமானங்களை வாங்கவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் தான் இந்த விபத்தும் அரங்கேறி இருக்கிறது. இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும், அதைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து ஏர் கனடா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "விமானம் வழக்கம் போலத் தரையிறங்கியது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்ட போதிலும் அதற்கான தேவை ஏற்படவில்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications