போச்சே.. 3 வருட சிறையால் வந்த சிக்கல்.. 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட இம்ரான் கானுக்கு விழுந்த தடை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கருவூல மோசடி வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை விதித்த நிலையில் அவர் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் நவம்பரில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான் கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். கடந்த முறை பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இதையடுத்து பிற கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைத்து பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நில மோசடி, கருவூல மோசடி என அவருக்கு எதிரான பல்வேறு புகார்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் பிரதமராக இருந்தபோது அவர் தனக்கு வந்த பரிசு வாட்ச், பேனா உள்பட பல்வேறு பரிசு பொருட்களை கருவூலத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 5ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கருவூல முறைகேடு வழக்கில் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இம்ரான் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் சிறை தண்டனையால் இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் தான் தற்போதைய இந்த உத்தரவு அவரையும், அவரது கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க இம்ரான் கான் தரப்பில் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்றம் தண்டனையை நிறுத்தும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications