நீதிபதிக்கு மிரட்டல்:திட்டமிட்டு அப்படி பேசவில்லை..வருத்தம் தெரிவிக்கிறேன்..பேக் அடித்த இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 'தான் திட்டமிட்டு அவ்வாறு பேசவில்லை என்றும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும்' இம்ரான் கான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.
இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
உயிரோடு வருவான்.. மகன் சடலத்தின் மீது உப்பை கொட்டி 8 மணி நேரம் காத்திருந்த தந்தை
ஆட்சியில் இருந்து கவிந்தது
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன. இதனால் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தன. இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார்.
நீதிபதிக்கு மிரட்டல்..
இதனால் பிரதமராக இருந்த இம்ரான் கான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக மாறிவிட்டார். தற்போது இம்ரான் கான் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
முன் ஜாமீன்
இந்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு நிலவியது. எனினும், நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்றார். இதனால், கைதில் இருந்து இம்ரான் கான் தற்காலிகமாக தப்பியிருந்தார்.
வருத்தம் தெரிவித்த இம்ரான் கான்
பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இம்ரான் கான் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திட்டமிட்டு அவ்வாறு பேசவில்லை என்றும் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.