அமெரிக்க சாலை விபத்தில் 4 இந்தியர்கள் பலி – ஒருவர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு இந்தியர்கள் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இந்த விபத்து நடந்தது. இதில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
காரின் ஓட்டுனர் தேவேந்திர பிரசாத் பட்டேல், காரின் பின்புறம் அமர்ந்திருந்த கோகிலா பட்டேல், அனுசியாபென் பட்டேல், ஜெயந்திலால் பட் ஆகிய நான்கு பேரும்தான் இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ஆவர்.
மில்லியன் ஜெஹெர்ஜிஸ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். மேலும் சிவப்பு விளக்கு சிக்னலையும் அவர் பொருட்படுத்தவில்லை. இவர் ஓட்டி வந்த காரால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமான ஜெஹெர்ஜிஸ் கைது செய்யப்பட்டு அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த மற்றொரு இந்தியரான ஷன்மதி பட்டேல் பலத்த காயத்துடன் மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.