துபாயில் இந்திய கள்ள நோட்டுகள் வைத்திருந்த 4 பாகிஸ்தானியர்களுக்கு சிறை
துபாய்: துபாயில் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 4 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கள்ளநோட்டு கைமாற்றப்படுவதாக ஐக்கிய அமீரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் கள்ளநோட்டை வாங்குபவர்கள் போல நடித்து பாகிஸ்தானைச் சேர்ந்தவரை அணுகியுள்ளார். இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் இந்திய கள்ளநோட்டுகளுடன் வந்து அதை மப்டியில் இருந்த போலீஸ்காரரிடம் அளித்தனர்.
அப்போது அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த ரூ. 47 லட்சத்து 14 ஆயிரத்து 716 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி 4வது நபர் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தங்களுக்கு தெரியவே தெரியாது என்றனர்.
கள்ளநோட்டை மாற்ற முயன்ற அவர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அந்த 4 பேருக்கும் தலா ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் முடிந்த பிறகு அந்த 4 பேரும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications