பாரீஸ் தாக்குதலுக்கு பதிலடி... சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது சரமாரி விமான தாக்குதல்!!
பாரீஸ்: உலகை உலுக்கிய பாரீஸ் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு விடுதிகள் என பல இடங்களில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் மொத்தம் 129 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்னமும் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாரீஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை உள்பட 7 பேரை பிடித்து பிரான்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத் தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிரியாவில் பிரான்ஸ் விமானப் படையை சேர்ந்த 10 போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் மீது சரமாரியாக குண்டுகளை வீசிஉள்ளது. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து புறப்பட்டு சென்ற பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா உதவியுடன் இத் தாக்குதலை நடத்திஉள்ளது.