நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 9 பேரை ரிஸ்க் எடுத்து மீட்டு வந்த இந்திய ராணுவத்தின் “துருவ்”
கோர்க்கா: நேபாளத்தையே புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, கடந்த 17 நாட்களாக மீண்டு வர முடியாமல் தொலை தூர கிராமத்தில் சிக்கித் தவித்த 2 பிரெஞ்சு மலையேற்ற வீரர்களையும், 8 நேபாள மக்களையும் கோர்க்கா மாவட்டத்தின் மிகவும் ஆபத்தான, ஆள் அரவமற்ற மச்சகோலா பகுதியில் இருந்து காப்பாற்றி கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவு ஹெலிகாப்டரான துருவ்.
அது தவிர, அவர்களை மீட்டு திரும்பும்போது, போக்காரா பகுதியில், சிங்ளா என்ற கிராமத்தில் சிக்கித் தவித்த உடல்நிலை பாதிக்கப்பட்ட 82 வயதான மூதாட்டி ஒருவரையும் காப்பாற்றியுள்ளனர் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய இந்திய ராணுவத்தினர்.

இன்கிரிட் மற்றும் ஜூலியன் ஆகிய அந்த இரு பிரெஞ்சு மலையேற்ற வீரர்கள் நேபாளின் அமைதியான பிரதேசமான கோர்க்கா மாவட்டத்தின் மலைப்பகுதியில் ஏப்ரல் 25 ஆம் தேதியன்று 7.9 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிக் கொண்டனர்.
தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரின் தகவலின் மூலமாக கிட்டதட்ட 17 நாட்களுக்குப் பின்னர் அவர்களை மீட்டுள்ளது "துருவ்".
மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த செயலைச் செய்த பெருமைக்குரியவர்கள் இந்திய ராணுவ விமானிகளான லெப்டினட் கவுசிக் மற்றும் மேஜர் தானேஷ் ஆகியோர் ஆவர்..
இந்திய ராணுவத்தின் மீட்புப் படை ஹெலிகாப்டரான ஏ.எல்.ஹெச் துருவ் அதிக மேகங்கள், குறைந்த வெளிச்சம், சூறாவளி, மழை என்று அனைத்தையும் தாண்டிப் பறக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications