லண்டன் தாக்குதல் தீவிரவாதிகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாது.. மதகுருக்கள் மறுப்பு!
லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாது என மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன்: லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாது என மதகுருக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற இமாம்கள் யாரும் தீவிரவாதிகளின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
லண்டனில் கடந்த 3-ம் தேதி பாலத்தில் வாகனங்களை மோதச் செய்தும், பாரோ மார்க்கெட் அருகே பொதுமக்கள் மீது கத்திக்குத்து நடத்தியும் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
48 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். இதனிடையே இவர்களுக்கு உதவியதாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் 7 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமிய முறைப்படி இறுதி சடங்குகள் மற்றும் பிராத்தனைகள் நடத்த பிரிட்டன் வாழ் இஸ்லாமிய மதகுருக்கள் 130 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மற்ற இமாம்கள் அவர்களது உடல்களுக்கு இறுதி சடங்கு செய்யக்கூடாது எனவும், அவர்கள் இஸ்லாம் கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவர்கள் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.