இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் ஜி7 நாடுகள்.. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என திட்டவட்டம்!
ஜெனீவா: இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்கள் இரு நாடுகளுக்குமிடையே பதற்றத்தைத் தணிக்க அழைப்பு விடுத்துள்ளனர். இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இஸ்ரேல் ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அங்குப் பதற்றம் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் இரு நாடுகளுமே பின்வாங்குவது போலத் தெரியவில்லை. இதனால் நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.

ஜி7 நாடுகள்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஜி7 நாடுகள் அறிக்கை வெளியிட உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே பதற்றத்தைத் தணிக்க ஜி7 அழைப்பு விடுக்கவுள்ளது. இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரைவு அறிக்கை
இந்த வரைவு அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஜி7 கூட்டமைப்பு என்பது இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்டதாகவும். இந்த ஜி7 தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிநிதிகள் நாளை கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் ரிசார்ட்டில் ஆலோசனை நடத்துகிறார்கள். சைப்ரஸிலிருந்து கனடாவுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதில் இஸ்ரேல்-ஈரான் மோதல், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைத்து, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஜி7 தலைவர்கள் வரைவு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர். எரிசக்தி சந்தை உட்படச் சந்தை நிலைமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இஸ்ரேல் ஈரான் மோதல் தீவிரமடைந்து சர்வதேச எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜி7 உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
முன்னதாக திங்கட்கிழமை அன்று, ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களைத் தாக்கின. நான்காவது நாளாகவும் சண்டை தொடர்ந்து கொண்டிருந்ததால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்தன. ஈரான் தாக்குதலுக்குப் பதிலடியாக, மேற்கு தெஹ்ரானில் உள்ள ஒரு ராணுவ தளத்தை இஸ்ரேல் தாக்கியது. இதனால் ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆபரேஷன் ரைசிங் லயன்
கடந்த ஜூன் 13ம் தேதி "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இருந்தது. ஈரான் கடந்த சில ஆண்டுகளாகவே செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை உற்பத்தி செய்து வந்த நிலையில், அதை வைத்து அணு குண்டுகளைத் தயாரிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதைத் தடுக்கவே அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கி இருந்தது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்படவில்லை. இதன் காரணமாகவே இஸ்ரேல் திடீரென தாக்குதலை ஆரம்பித்தது.
இந்த மோதலுக்கு நடுவே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருவதாக ஈரான் அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்படி அங்குப் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ஜி7 நாடுகளின் வரைவு அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications