Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது தாக்குதல்! 32 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காசா: பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உணவு வாங்க வரிசையில் நின்றவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர்.

இது தொடர்பாக தி கார்டியன் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளை என்கிற பெயரில், காசாவில் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று காசாவின் தெற்குப் பகுதியில் அறக்கட்டளையிலிருந்து உணவு வாங்க காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள், உணவு வாங்க காத்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

Gaza IDF Israel

இஸ்ரேலின் படுகொலை

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இது ஒரு 'படுகொலை' என்று விவரித்தனர். மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அறக்கட்டளையின் உதவி மையத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் உள்ள டெய்னா பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலியப் படைகளின் துப்பாக்கிச் சூடே காரணம் என்று சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்தார்.

சாட்சிகள் வாக்குமூலம்

காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் குழந்தைகளும் அதிக அளவில் இருந்திருக்கின்றன. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்களுக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல ரஃபா அருகே உணவு வழங்கும் அறக்கட்டளை அமைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. அதில் 9 பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிகிச்சைக்கு உபகரணங்கள் இல்லை

காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையின் இயக்குநர் கூறுகையில், 'மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை இதற்கு முன்பு பார்த்ததில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்' உரிய உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளோம்' என்று அவர் இஸ்ரேலிய செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

உணவா? உயிரா?

காசாவில் ஐ.நா தலைமையிலான உதவி விநியோக முறையை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த அறக்கட்டளை. ஆனால் தாக்குதல் சம்பவத்திற்கு இது மறுப்பு தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தங்களது மையங்களில் இருந்து வெகு தொலைவில், அவை திறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது என்றும் தெரிவித்துள்ளது. "உதவி தேடுபவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் எங்கள் தளங்களுக்கு வர வேண்டாம் என்று நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்" என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ரஃபாவின் அருகே சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் ராணுவ வீரர்களை நெருங்கியதால், அவர்களை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கிச் சுட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இந்தச் சம்பவம் உதவி மையம் மூடப்பட்டிருந்த நேரத்தில் நிகழ்ந்தது என்றும் தெரிவித்திருக்கிறது.

உணவுக்காக உயிரை விட்ட இளைஞர்கள்

இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த ஒருவர் அசோசியேட் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'நான் உணவு உதவி மையத்தை நோக்கிப் பல இளைஞர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, கூட்டத்தை எச்சரிக்கும் விதமாக முதலில் வானத்தை நோக்கிச் சுட்டார்கள். பின்னர், மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார்கள். இது ஒரு படுகொலை. அவர்கள் எங்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்' என்றார். மேலும், தான் எப்படியோ தப்பித்து வந்ததாகவும், ஆனால் குறைந்தது மூன்று பேர் தன் கண் முன்னே கொல்லப்பட்டதையும், பலர் காயங்களுடன் தப்பி ஓடுவதையும் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

அக்ரம் ஆக்கர் என்பவர் கூறுகையில், 'டேங்கிகள் மற்றும் டிரோன்களில் பொருத்தப்பட்டிருந்த இயந்திர துப்பாக்கிகள் மூலம் துருப்புக்கள் சுட்டார்கள். இந்தச் சம்பவம் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் நடந்தது. அவர்கள் எங்களைச் சுற்றி வளைத்து நேரடியாகச் சுடத் தொடங்கினார்கள். தரையில் பலர் காயங்களுடன் கிடந்ததைக் கண்டேன்' என்றார்.

எப்போது முடியும்?

சனா அல்-ஜபேரி என்ற 55 வயது பெண் கூறுகையில், 'நான் அந்தப் பகுதியில் இருந்து தப்பி வந்தபோது நிறைய இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் பார்த்தேன். 'உணவு, உணவு' என்று நாங்கள் கத்தினோம். ஆனால், அவர்கள் எங்களுடன் பேசவில்லை. மாறாக, அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்' என்றார்" என தி கார்டியன் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காசாவில் உணவு வாங்க வருபவர்கள் மீது இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+