அப்படியே சரியும் தங்கம் விலை.. தென் கொரியாவிலிருந்து வந்த மெசேஜ்! நடக்கப்போகும் மாற்றம்
சியோல்: அமெரிக்கா-சீனா பஞ்சாயத்து காரணமாக ஏற்பட்டிருக்கும் சர்வதேச பதற்றம், தங்கம் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம். தற்போது இந்த பதற்றம் குறையும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே இந்தியாவில் தங்கம் விலை விரைவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அப்படி என்னதான் பஞ்சாயத்து? என்று கேட்டால் சொல்ல 1008 பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் சமீபத்திய மிக முக்கியமான பிரச்சனை வரிதான். சீனா எங்களிடமிருந்து அறிவுசார் சொத்துக்களை திருடுகிறது, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அநியாயத்திற்கு மானியத்தை வழங்குகிறது என்றெல்லாம் சொல்லி 25-30% வரை வட்டி போட்டிருந்தது. இது தவிர போதைப்பொருள் கடத்துவதற்கு உடந்தை என்று சொல்லி மேலும் 20% வரை போட்டிருந்தது அமெரிக்கா.

இதெல்லாம் இல்லாமல், எங்களுக்கு கனிம வளங்களை தர மறுக்கிறது என்று சொல்லி 100% வரியை போட்டிருந்தது. இந்த வரி நவ.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப். இந்த வரிகள் காரணமாக சர்வதேச அளவில் சப்ளை செயின் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் கையில் வைத்திருந்த டாலர்களை வெளியில் விற்க தொடங்கினர். பதிலுக்கு தங்கத்தில் முதலீடு செய்தனர். டிமாண்ட் அதிகமாக இருக்கும் பொருட்களுக்கு விலையும் உயரும். அந்த வகையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
ஆனால், தென்கொரியாவில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து டிரம்ப் பேசுகிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தலைவலிகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பஞ்சாயத்துகள் 100% சரியாகவில்லை என்றாலும் கூட, 50-70% தீர்வு காணப்பட்டாலும், சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் குறைந்துவிடும். எனவே, இந்த சந்திப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
இது குறித்து டிரம்ப் கூறுகையில், "அமெரிக்காவுக்கு மீண்டும் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடாக கொண்டு வருவோம். இதற்கான முயற்சிக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த பயணம் மிகச்சிறந்தது. நாளை உலக தலைவர்களை சந்திக்கிறேன். குறிப்பாக சீன அதிபரை சந்திக்கிறேன். அவருடன் நான் எதிர்பார்ககும் வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பலன் கொடுக்கும். போர் அல்லது மோதல்களை காட்டிலும் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் கொண்டவை" என்று கூறியுள்ளார்.
இந்த மாநாட்டுக்காக டிரம்ப் 6 நாட்கள் ஆசியாவில் கழிக்கிறார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஜப்பானில் வைத்து சீன அதிபரை டிரம்ப் சந்தித்திருந்தார். இதனையடுத்து வரும் வியாழக்கிழமைதான் இரு தலைவர்களும் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளும் மாறி மாறி விதித்துக்கொண்ட வரி முடிவுக்கு வரும் என்றும், டிரம்ப் சொன்ன நவ.1ம் தேதி 100% வரியும் கைவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமைதி திரும்பி, தங்கம் விலை குறையும் என நம்பலாம்.
இந்தியாவை பொறுத்தவரை தங்கம் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 69% வரை கடுமையாக உயர்ந்திருக்கிறது. சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications