சிங்கப்பூர் பொது தேர்தல்: 12வது முறையாக ஆளும் மக்கள் செயல் கட்சி அபார வெற்றி- மீண்டும் பிரதமராக லீ!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி வாகை சூடியது. மொத்தமுள்ள 89 தொகுதிகளில் 83 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.
சிங்கப்பூரின் 12வது பொது தேர்தல் நேற்று நடைபெற்றது. 89 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் 181 பேர் போட்டியிட்டனர்.

இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாட்டாளிக் கட்சி 28 தொகுதிகளிலும், தேசிய ஒருங்கிணைப்புக் கட்சி 12 இடங்களிலும், ஜனநாயக கட்சி 11, சீர்திருத்தக் கட்சி 11, சிங்க் பர்ஸ்ட் கட்சி 10, ஜனநாயக கூட்டணி 6, சிங்கப்பூர் மக்கள் கட்சி 8, மக்கள் சக்தி 4, சுயேச்சையானோர் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். அவர்களில், தற்போதைய அமைச்சர்கள் சண்முகம், ஈஸ்வரன், விவியன் பாலகிருஷ்ணன் உள்பட இந்திய வம்சாவளியைச் சார்ந்த வேட்பாளர்கள் 21 பேரும் அடங்குவர்.
சிங்கப்பூர் விடுதலை பெற்றதில் இருந்து பிஏபி கட்சியே ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், 50 ஆண்டுகளாக ஒற்றைக் கட்சி நடத்தும் ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் பிஏபி கட்சி 83 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 69.86 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது மக்கள் செயல் கட்சி. அக்கட்சி ஆட்சியைப் பிடிப்பது இது 12வது முறையாகும்.
மொத்தமுள்ள 8 எதிர்க்கட்சிகளில் பெரும்பாலான கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இடம் ஏதும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.
A long & memorable day ytdy. TY for your support. My team & I will serve u to e best of our ability. – LHL #GE2015 pic.twitter.com/yuAqFKd3lh
— Lee Hsien Loong (@leehsienloong) September 12, 2015 மக்கள் செயல் கட்சியின் நிறுவனரும், சிங்கப்பூர் தந்தை என்று அழைக்கப்படுபவருமான லீ குவான் யூ-வின் மறைவுக்குப் பிறகு நடைபெற்றுள்ள தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி தலைவர் லீ ஹூசின் லூங், சிங்கப்பூரை நவீனப்படுத்திய லீ குவான் ஹுயு வின் மகன் ஆவார். இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. வாக்களித்த மக்களுக்கு, பிரதமர் லீ ஹூசின் லூங் தமது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications