ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி 464 ஈரானியர்கள் பலி: சவுதிக்கு கோமேனி எச்சரிக்கை
தெஹ்ரான்: மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஈரானியர்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது என்று ஈரான் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் ஹஜ் யாத்ரீகர்கள் கடந்த மாதம் 24ம் தேதி கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 51 இந்தியர்கள் உள்பட 769 பேர் பலியாகினர், 934 காயம் அடைந்தனர். மேலும் பலர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இந்த விபத்தில் ஈரானைச் சேர்ந்த 239 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஈரானியர்களின் எண்ணிக்கை 464 ஆக அதிகரித்துள்ளது என்று ஈரான் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மினா நகரில் மாயமான ஈரானியர்களையும் பலியானவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஹஜ் கூட்டநெரிசல் நடக்க சவுதி அரேபிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று ஈரானின் முதன்மை தலைவர் அயதுல்லா கோமேனி தெரிவித்துள்ளார். மேலும் மினா விபத்தில் 769 பேர் பலியானதாக சவுதி பொய் சொல்வதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாங்கள் மட்டும் நடவடிக்கை எடுக்க நினைத்தால் அது கடுமையானதாக இருக்கும் என்று அவர் சவுதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சவுதி அரேபிய அரசை கண்டித்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் போராட்டம் நடைபெற்றது. தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மினா விபத்து குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.