எங்களுக்கு எதிரி வேணும்.. இஸ்ரேலை தாக்கியது ஏன்? ஹமாஸ் நிழல் ராணுவ தலைவர் முழக்கம் -யார் இந்த தெய்ப்?
ஜெருசலேம்: இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் பாய்ந்து தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில், பல மாதங்களாக தன்னை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்த நிலையில் ஹமாஸின் நிழல் ராணுவ தலைவர் முஹம்மது தெய்ப் இது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
ஏவுகணை தாக்குதல்: பாலஸ்தீனின் காசா, மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை அடிக்கடி நடத்தி வரும் நிலையில், இன்று திடீரென இஸ்ரேலை நோக்கி பாலஸ்தீனிலிருந்து ராக்கெட்டுகள் பாய்ந்து உள்ளன. பாலஸ்தீனின் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலை தாக்கிய இந்த ஏவுகணைகளின் எண்ணிக்கை 5000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலை பாலஸ்தீனில் இயங்கி வரும் ஹமாஸ் நடத்தி இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இஸ்ரேலால் பாலஸ்தீன் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாசை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அறிவித்து இருக்கிறது. இந்த அமைப்பின் ராணுவ தலைவராக அறியப்படுபவர் முஹம்மது தெய்ப். பெரும்பாலும் வெளியில் முகம் காட்டாமல் நிகழ் தலைவராகவே இருந்து வரும் இவர், இந்த தாக்குதலை தொடர்ந்து வாய் திறந்து இருக்கிறார். இதனை தங்கள் அமைப்புதான் செய்தது என அவர் பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.
தாக்குதல் ஏன்? ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியை இஸ்ரேல் இழிவுபடுத்தியதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், "நாங்கள் எதிரியை எச்சரித்தோம். அவர்கள் இஸ்லாமிய இயக்கங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் இறங்கியது." என்றார்.
ஹமாஸ் படையினருக்கு அவர் பிறப்பித்த உத்தரவில், "உங்களிடம் உள்ள அனைத்து கருவிகள் மற்றும் யுக்திகளின் மூலம் குடியேற்றங்களின் மீது தாக்குதல்களை நடத்துங்கள். இன்று யாரெல்லாம் துப்பாக்கி வைத்து உள்ளீர்களோ அவர்கள் அதை வெளியில் எடுங்கள். இது நமக்கான நேரம். உங்கள் கோடாரி, வாகனம், லாரியும் எல்லோரும் புறப்படுங்கள். புதிய வரலாறு இன்று பிறக்கிறது. ஒளிமயமான, மரியாதைக்குரிய வரலாறு அது.
இஸ்ரேலில் வாழும் அரபு மக்களும், இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட வேண்டும். நாங்கள் எதிரிகளின் படைகள் உள்ள இடங்கள், ராணுவ தலங்கள், விமான நிலையங்களை மட்டுமே குறிவைத்து இருக்கிறோம். 5000 ராக்கெட்டுகள் மற்றும் செல் குண்டுகள் மூலம் தாக்கி உள்ளோம்." என்று கூறி உள்ளார். அல் அக்சா மசூதிக்கும் இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் போலீஸ் படைகள் நுழைந்ததற்கும், இஸ்லாமியர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதற்கும் ஜோர்டான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அதை சுட்டிக்காட்டி உள்ளார் ஹமாஸ் தலைவர்.












Click it and Unblock the Notifications