18ம் நூற்றாண்டு ‘கவுன்’ போட்டு வாக்மேனில் பாட்டு கேட்கும் பெண்!
லண்டன்: பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷன் உடையை தற்போதைய காலகட்டத்தில் அணிந்தால் எப்படி இருக்கும் என்ற ஐடியாவை செயல்படுத்தி, அவற்றைப் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார் திபால்ட் கரோன் என்ற புகைப்படக் கலைஞர்.
காலத்திற்கு ஏற்ப நமது வசதிக்குத் தக்க உடைகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து தான் வருகிறது. நம் பாட்டியும், தாத்தாவும் கூட சேலை, வேட்டியில் தான் உலா வந்தார்கள்.
ஆனால், நாம் இன்று ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் என வசதிக்கு தகுந்தபடி மாறிக் கொண்டோம்.

திபால்ட் கரோன்...
இந்நிலையில், 18ம் நூற்றாண்டில் பேஷனாக இருந்த உடையை தற்போது அணிந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி திபால்ட் கரோன் என்ற புகைப்படக் கலைஞருக்கு எழுந்தது. உடனே தனது எண்ணத்தை செயல் வடிவமாக்கி விட்டார் அவர்.

நீண்ட கவுன்...
அதன்படி பதினெட்டாம் நூற்றாண்டின் பேஷனாக விளங்கிய மாபெரும் கவுனையும், அதனுடன் தலையில் வைக்கப்படும் விக்குகளையும் ஒரு பெண்ணை அணிய வைத்தார் கரோன். பின்னர் அப்பெண்ணை தற்போதைய காலகட்டத்திற்கு தகுந்தபடி செயல்பட வைத்து அவற்றைப் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார்.

வாக்மேனில் பாடல்...
நீண்ட கவுனையும், தலையில் விக்கையும் அணிந்தபடி அப்பெண் வாகனத்திற்கு பெட்ரோல் போடுகிறார், வாக்மேனில் பாடல் கேட்கிறார், நீண்ட ரயில் நிலையத்தில் புத்தகம் படித்தபடி அமர்ந்திருக்கிறார், சாலையைக் கடக்க நிற்கிறார்.

கதை சொல்லும் போட்டோக்கள்...
இவ்வாறு கரோனின் ஒவ்வொரு புகைப்படங்களும் கதை சொல்லும் விதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது, ‘ஒரு காலத்தின் பேஷனின் உச்சமாகக் கருதப்படும் பல உடைகளும், மற்றுமொரு காலகட்டத்தில் தினசரி சூழ்நிலைகளுக்கு ஒத்துவராத ஒன்றாக தள்ளப்படும்' நிசர்சனம் நமக்குப் புரிகிறது.
Image Credit: Thibault Carron












Click it and Unblock the Notifications