இந்தியர்களுடன் மாயமான மலேசியக் கப்பல் கடத்தப்பட்டதா ? தேடும் பணி தீவிரம்
கோலாலம்பூர் : கடற்கொள்ளை அதிகம் நடைபெறும் தென் சீனக் கடலில், இந்திய ஊழியர்களுடன் மலேசிய சரக்குக் கப்பல் ஒன்று மாயமாகியுள்ளது.
அந்தக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மலேசிய கடல்சார் பாதுகாப்புத் துறையினர் தேடும் பணியை வியாழக்கிழமை தொடங்கி உள்ளனர்.

உணவுப் பொருள்கள், இரும்புக் குழாய்கள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு, "எம்.வி. சாஹ் லியான்' என்ற சரக்குக் கப்பல், மலேசியாவின் குச்சிங் துறைமுகத்தில் இருந்து லிம்பங் துறைமுகத்துக்கு கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றது.
அந்தக் கப்பலில் இந்தியர்கள் உள்பட 14 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதிக்குப் பிறகு அந்தக் கப்பலை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கப்பலின் உரிமையாளர் நேற்று புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மலேசிய கடல்சார் பாதுகாப்புத் துறையினர், மாயமான அந்தக் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தக் கப்பல், மலேசிய கடல் பகுதியில் இருந்து கடத்தப்பட்டு, தற்போது இந்தோனேசிய கடல் பகுதியில் உள்ள நாதுனா தீவு அருகே இருக்க வேண்டும்' என்று கடலோர காவல் படைத் தலைவர் கூறியுள்ளார்.
இதனிடையே, மாயமான அந்தக் கப்பல், மிரி பகுதிக்கு மேற்கே, 23 கடல் மைல் தொலைவில் கடந்த புதன்கிழமை தென்பட்டதாகவும், அந்தக் கப்பலின் பாகங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கடல்சார் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications