பிறந்த நாள் கொண்டாடிய ஹிலரி: வாஷிங்டனில் ஹோட்டல் திறந்த ட்ரம்ப்!
நியூயார்க்(யு.எஸ்): அதிபர் வேட்பாளர் ஹிலரி க்ளிண்டன் தனது 69 வது பிறந்த நாளை நேற்று, அக்டோபர் 26ம் தேதி கொண்டாடினார்.
ஃப்ளோரிடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஹிலரிக்கு, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் அனைவரும் ஹேப்பி பர்த்டே பாடி வாழ்த்து தெரிவித்தனர்.
முந்தய நாள் பிரபல பாப் பாடகி அடல் நிகழ்ச்சியில் ஹிலரி கலந்து கொண்டார். நேற்றிரவு குடும்பத்தாருடன் தனியாக , ஹிலரி.பிறந்த நாளைக் கொண்டாடினார்.
ஆதரவாளர்களை விரைவில் முன் வாக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தேர்தலில் வெற்றி பெறும் வரையிலும் நாம் ஓய்ந்து விடக் கூடாது. சற்றே அயர்ந்தாலும் ட்ரம்ப் வெற்றி பெற்று விடுவார். எனவே விழிப்புடன் இருந்து ஆதரவாளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஹோட்டல் திறந்த ட்ரம்ப்
ஃப்ளோரிடாவில் வாக்கு சேகரித்த வேகத்திலேயே, வாஷிங்கடனுக்கு பறந்து, வெள்ளை மாளிகைக்கு மிக அருகாமையில் தனது புதிய ஹோட்டலை மனைவி, பிள்ளைகள் சகிதம் வந்து, ட்ரம்ப் திறந்து வைத்துள்ளார்.
தேர்தலின் கடைசி இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமான நேரத்தில், சொந்த வேலைக்காக ஹோட்டல் திறக்க போகிறாரே. அவருக்கே நம்பிக்கை இல்லையா என்று குடியரசுக் கட்சிக்குள் கேள்விகள் எழுந்துள்ளன.
'பட்ஜெட்டுக்குள் செலவு, முன்னதாக திட்ட நிறைவேற்றம்' இது தான் எனது தாரக மந்திரம், வாஷிங்டன் ட்ரம்ப் ஹோட்டல் இதை மீண்டும் உறுதி செய்துள்ளது என்று ட்ரம்ப் பெருமிதம் கொண்டுள்ளார்.
ஹிலரி க்ளிண்டன், ட்ரம்ப் தனது ஹோட்டல் பணிகளுக்கு சட்டபூர்வமற்ற குடிமக்களைத்தான் உபயோகித்துள்ளர். அதே மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் அரசியல் செய்கிறார். இந்த இரட்டை நிலைப்பாட்டை கண்டிக்க வேண்டும். அவரைத் தோற்கடிப்பது தான் சரியான பாடமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
தனது சொந்தப் பணத்திலிருந்து 100 மில்லியன் டாலர் வரை தேர்தல் நிதியாகக் கொடுப்பேன் என்று கூறியுள்ள ட்ரம்ப், அந்த இலக்கை அடைய இன்னும் அதிக தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இரண்டு வாரத்திற்கும் குறைவாக உள்ள நாட்களுக்குள் எப்படி கொடுக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புகளும் எழுந்துள்ளன.
ட்ரம்ப் தனது சொந்த நிதியை தேர்தல் நன்கொடையாக கொடுக்க ஏன் தயங்குகிறார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லையா? அப்படி என்றால் நாங்கள் ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று கட்சியின் தேர்தல் நிதி நன்கொடையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நேரத்தில் அவருக்கு எது முக்கியம் என்று எப்படி தெரியாமல் போனது? ஹோட்டல் திறப்பது தான் முக்கியாமா? என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
வெற்றி பெற்று அதிபரின் வெள்ளை மாளிகைக்கு போகாவிட்டாலும், மிக அருகாமையில் உள்ள ட்ரம்ப் ஹோட்டல் அறைகள் அவருக்காக திறந்தே இருக்கும். வெள்ளை மாளிகை உள்ளே போகவில்லை என்றாலும் அருகில் இருந்தே ஆறுதல் அடைந்து கொள்வார் போலும்!
-இர தினகர்