மீண்டும் ஹிலரி இமெயில் விவகாரம்: தேர்தலை திசை திருப்புகிறதா அமெரிக்க புலனாய்வுத் துறை?
வாஷிங்டன்(யு.எஸ்) அதிபர் தேர்தலுக்கு 8நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதம் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
ஹிலரி க்ளிண்டன் வெளியுறவுத் துறை செயலாளராக(அமைச்சர்) பணியாற்றிய போது, விதிமுறைகளுக்கு புறம்பாக தனிப்பட்ட சர்வர் வைத்து அலுவலக இமெயில்கள் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
ஜூலை மாதம், மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமி, பாராளுமன்ற
குழுவினரிடம், அரசு ரகசியங்கள் கூடிய இமெயில்கள் எதுவும் தனிப்பட்ட சர்வரிலிருந்து செல்ல வில்லை. அதனால் ஹிலரி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை இல்லை என்று கூறி இருந்தார்.
ஹிலரி தரப்பும் இது வரையிலும் அதைக் குறிப்பிட்டு வந்தனர்.
கோமியின் கட்சிப் பாசமா? அல்லது நேர்மையா?
வெள்ளிக்கிழமை அதே இயக்குனர் கோமி, பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு, புதிதாக சில இமெயில்கள் கிடைத்துள்ளன, அது ஹிலரியின் தனிப்பட்ட சர்வரிலிருந்து சென்றதாக இருக்கக்கூடும், அரசு ரகசியங்கள் சார்ந்ததா இல்லையா என்று இப்போது கூற இயலாது என்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்த இமெயில்கள், ஹிலரியின் உதவியாளரின் கணவர் அண்டனி வீனர் என்பவருடைய கம்ப்யூட்டரில் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது, அண்டனி வீனர், மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறார். பதின்ம வயது பெண்ணுக்கு ஆபாச குறுந் தகவல்கள் அனுப்பியதற்காக, புலனாய்வுத் துறை அவரை விசாரித்து வருகிறார்கள்.
அந்த விசாரணையின் போது, அவருடைய கம்ப்யூட்டரில் ஆயிரக்கணக்கான இமெயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஹிலரியின் சர்வரிலிருந்த மெயில்களும் இருக்கக்கூடும் என்பதுதான் இயக்குநரின் கடிதம் கூறுகிறது.
எந்த திட்டமிட்ட குற்றச்சாட்டும் இல்லாமல், ஏதாவது கிடைக்ககூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் எப்படி இந்த கடிதத்தை அனுப்பலாம் என்று ஹிலரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜேம்ஸ் கோமி குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர். ஒபாமா தான் அவரை இந்த பதவியில் அமர்த்தினார் (இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்காரரை புலனாய்வுத்துறை இயக்குனராக மோடி நியமிப்பாரா என்ன?)
கட்சிப் பாசத்தில் , தேர்தலை திசை திருப்புவதற்காக இந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்று ஜனநாயகக் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்கள் இயக்குனர் கோமிக்கு சில வாரங்கள் முன்னதாகவே தெரியும், ஆனாலும் காலதாமதமாக தேர்தலுக்கு மிக அருகில் வெளியுட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பிட்ட சில குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு மட்டுமே கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெற்றியை பறிப்போம் என ஹிலரி அழைப்பு
இந்த தேர்தலை திசை திருப்ப நடக்கும் அனைத்தையும் புறக்கணித்து, வெற்றியை நோக்கி செயல்படுவோம். அனைவரும் முன் வாக்கு செய்யுங்கள் ஆதரவாளர்களை திரட்டி வாக்களிக்கச் செய்யுங்கள். அமெரிக்கர்களை பிரித்து பாகுபடுத்தும் ட்ரம்பின் அரசியலை முறியடிப்போம் என்று தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
கோமியின் பெயரைக் குறிப்பிடாமல், "கடிதத்தில் குறிப்பிட்டது போதாது. அனைத்து இமெயில்
விவரங்களையும் மக்கள் முன் வெளியிட வேண்டும். மக்களுக்கு உண்மை தெரியட்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறார்.
முன்னதாக இதே கோமியை கடுமையாக சாடிய ட்ரம்ப், இப்போது "இன்னும் நீதி நிலைத்து இருக்கிறது. தேர்தல் முறைகேடுகள் நான் நினைத்த அளவுக்கு இல்லை. குற்றவியல் தண்டனைக்குரிய ஹிலரி தண்டிக்கப்பட வேண்டும். தேர்தலை நிறுத்தி விட்டு தன்னை அதிபராக அறிவிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இக் கடிதத்திற்கு பிறகு சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், வாக்களார் மத்தியில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது. கட்சியினர் தங்கள் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கட்சி சாராதவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய மாநிலங்களான வட கரோலைனா மற்றும் பென்சில்வேனியாவில் ஹிலரியின் ஆதரவு நிலைத்து இருக்கிறதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடும் போட்டி நிலவும் இந்த இரு மாநிலங்களை வென்றாலே ஹிலரி அதிபர் என்பது உறுதியாகி விடும். ஃப்ளோரிடா, ஒஹாயோ இல்லாமலே வென்ற அதிபர் என்ற கூடுதல் பெருமையும் கிடைக்கும்.
ஃப்ளோரிடா, ஒஹாயோவை வென்றால் கூட ட்ரம்ப், கூடுதலாக பல மாநிலங்களுடன், பென்சில்வேனியா அல்லது வட கரோலைனாவை வெல்ல வேண்டும். ஆனாலும், இமெயில் விவகாரத்தால், கடைசி வாரத்தை எட்டியுள்ள அதிபர் தேர்தலில் கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-இர தினகர்