பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறும்போது இந்தி மொழியும் வளரும்: பிரதமர் மோடி
தாஷ்கண்ட்: இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறும்போது இந்தி மொழியின் முக்கியத்துவமும் அதிகரிக்கும் என்று உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 6 நாடுகளுக்கு 8 நாள்கள் பயணமாக நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். முதலில் உஸ்பெகிஸ்தானுக்கு சென்றார். அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று தலைநகர் தாஷ்கண்ட்டில் இந்தி மொழி பயிலும் மாணவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோரிடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது முதலாவது உஸ்பெக்-இந்தி மொழி அகராதியை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:
பொருளாதாரம்- மொழி தொடர்பு
ஒரு நாட்டின் நிதி வலிமைக்கும், அந்நாட்டு மொழியின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு நாடு பொருளாதாரரீதியாக முன்னேறும்போது, அந்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதன் அவசியம் மிக மிக முக்கியமாகிறது.
இந்தி மொழி
இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்போது, இந்தி மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து உலகம் முழுவதும் பலரும் அதை கற்க ஆர்வம் கொள்வார்கள். நான் வெளிநாட்டுக்கு செல்லும்போதெல்லாம், அந்த நாட்டு மொழியில் சில வார்த்தைகள் பேசினால், அங்குள்ள மக்கள் உடனடி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். மொழி என்பது தண்ணீர் போன்றது. எதில் அதை ஊற்றுகிறோமோ, அந்த நிறத்தையே அது பெறுகிறது. அது காற்று போன்றது. எந்த தோட்டம் வழியாக வருகிறதோ, அந்த மணத்தையும் சுமந்து வருகிறது.
இந்தி தெரிந்த அதிபர்
உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் நேற்று இரவு இந்தி பாடல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவர் ஒவ்வொரு இந்தி பாடலையும் தெரிந்து வைத்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இங்கு இந்திய படங்களும், இசையும் பிரபலமாக உள்ளன.
இசைப் பள்ளிகள்
உஸ்பெகிஸ்தானில் ஒவ்வொரு கிராமத்திலும் இசைப்பள்ளிகள் இருப்பதாக அதிபர் கூறினார். இந்திய இசை மீது ஆர்வம் அதிகரித்திருப்பதால், மேலும் பல பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அமீர் குர்ஸ் கவிதைகள்
முன்னதாக உஸ்பெகிஸ்தான் பிரதமரை சந்தித்த போது பிரதமர் மோடி அமீர் குர்ஸின் கவிதைகளை பரிசாக வழங்கினார். அமீர் குர்ஸின் தந்தை உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.