ஷேக் ஹசீனா தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்தவர் போட்டி.. யார் இந்த கோபிந்த சந்திர பிரானிக்? பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொந்த தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த கோபிந்த சந்திர பிரானிக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். டிசம்பர் 28 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கும் அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறையால் ஆட்சியை இழந்தார். தற்போது நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இன்னும் வங்கதேசத்தில் வன்முறை அடங்கவில்லை. தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
அங்கு சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மைமன்சிங்கில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் எரித்து கொல்லப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள பல விசா மையங்கள் மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் 2026 பிப்ரவரி 12ம் தேதி வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் சொந்த தொகுதியான கோபால்கஞ்ச் - 3 (கோடாலபாரா - தூங்கிபாரா) தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த கோபிந்த சந்திர பிரமானிக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இவர் சுயேச்சையாக களமிறங்குகிறார். இதற்கான வேட்புமனுவை டிசம்பர் 28 ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
கோபிந்த சந்திர பிரமானிக் இவர் அடிப்படையில் வழக்கறிஞர், தற்போது வங்கதேசத்தில் ஹிந்து மஹாஜோட்டின் மத்திய குழுவின் பொதுச்செயலாளராக உள்ளார். யாருடைய ஆதரவு இன்றி அவர் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கட்சிகள் சார்பில் போட்டியிட்டால் நாடாளுமன்றத்தில் மக்கள் குறைகளை பேச வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனால் தனித்து போட்டியிடுகிறேன். சுயேச்சையாக களமிறங்கினால் நாடாளுமன்றத்தில் மக்களின் குறைகளை களைய அரசியல் சார்பின்றி குரல் கொடுக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் கோபால் கஞ்ச்-3 தொகுதியில் இவரை தவிர இன்னும் பலர் போட்டியிடுகின்றனர். முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி சார்பில் எஸ்.எம். ஜிலானி, தேசிய மக்கள் கட்சி (என்சிபி) சார்பில் ஆரிஃபுல் தரியா, ஜமாத்-இ-இஸ்லாமின் எம்.எம். ரெசாவுல் கரீம், கோனோ ஓடிகார் பரிஷத்தின் அபுல் பஷர், இஸ்லாமி அண்டோலன் வங்களாதேஷின் மருஃப் ஷேக் உள்பட இன்னும் சிலர் போட்டியிட்டுள்ளனர்.
வங்கதேசத்தை பொறுத்தவரை தற்போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடக்கும் தேர்தலில் அவரது கட்சி சார்பில் யாரும் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால் அவரது கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி, இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியான ஜமாத் இஸ்லாம் மற்றும் மாணவர் அமைப்பினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications