ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி உச்சகட்ட போராட்டம்- போலீசுடனான மோதலில் 300 பேர் காயம்
ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் ஜனநாயகம் போரி நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான மோதலில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உலகின் நிதி மையம் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள ஹாங்காங் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கடந்த 1997-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி, சீனாவின்வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது.
அது முதல், ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ‘ஒரு நாடு இரு ஆட்சி முறை' என்ற அடிப்படையில் ஹாங்காங் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், சீனா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்தான் அந்த நகரை வைத்துள்ளது.
தற்போது ஹாங்காங்கின் ஆட்சியாளராக தலைமை நிர்வாகி என்ற பெயரில் லீயுங் சன் யிங் செயல்பட்டு வருகிறார். ஹாங்காங்கில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு 2017-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என சீனா அறிவித்துள்ளது.
ஆனாலும் ஹாங்காங் மக்கள் தங்கள் விருப்பப்படி அந்தத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது. சீன அரசு அமைக்கிற குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் தலைவரை தாங்களே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரமான வாக்குரிமை வேண்டும் என கேட்டு மாணவர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டகாரர்களை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வருகின்றனர் இருந்தாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
இன்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.