ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக உச்சகட்ட போராட்டம்... இன்னொரு 'தியான்மென்' ஆக விஸ்வரூபம்?
Recommended Video
ஹாங்காங்: குற்றவாளிகளை சீனா, தைவானிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் உச்சகட்ட போராட்டம் தொடருகிறது. இந்த போராட்டத்தை ஒடுக்க ஹாங்காங் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங், 1997-ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் சீனாவின் ஒரு மாகாணமாக இல்லாமல் சுதந்திரமான ஒரு அரசாங்கமாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது.

ஹாங்காங்குக்கு தனிச் சட்டம் இருந்தாலும் முழுமையாக ஜனநாயகம் கோரி 2014-ல் பெரும் போராட்டம் வெடித்தது. அதேபோல் தற்போது குற்றவாளிகளை சீனா,தைவானிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இச்சட்ட திருத்தம் மூலம் அரசியல் எதிரிகளை ஹாங்காங் அரசு பழிவாங்கக் கூடும் என்பது போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு. அரசின் புதிய சட்ட திருத்தத்துக்கு எதிராக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் தொடருகின்றன.

இதனால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு இடையே ஆங்காங்கே மோதல்களும் வெடித்துள்ளன. ஆனால் போராட்டம் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு இந்த போராட்டம் ஓய்வதாகவும் இல்லை. அரசு அலுவலகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன.

1989-ல் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அந்த மாணவர்களை சீனா அரசு சுட்டுப் படுகொலை செய்தது. மொத்தம் 3000-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஹாங்காங்கின் தற்போதைய நிலை இன்னொரு தியான்மென் சதுக்க நிகழ்வை உருவாக்குமோ? என ஜனநாயகவாதிகள் அஞ்சுகின்றனர்.












Click it and Unblock the Notifications