அடுத்த பெருந்தொற்றாக வெடிக்கும் டெங்கு! உலகையே முடக்கிவிடும்- இப்படியொரு ஆபத்தை யாரும் எதிர்பார்க்கல
டெல்லி: காலநிலை மாற்றம் என்பது பூமிக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இந்த காலநிலை மாற்றம் இப்போது பல தொற்று நோய்கள் பரவவும் காரணமாக அமைந்துவிட்டது. முன்பு பாதிப்பு ஏற்படாத பல இடங்களில் கூட இப்போது திடீர் திடீரென மோசமான வைரஸ் பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் படுவேகமாக நடக்கும் நிலையில், பாதிப்புகளும் தீவிரமானதாக மாறுகிறது. குறிப்பாக இதன் காரணமாகவே டெங்கு வேகமாகப் பரவி வருகிறது.
பருவநிலை மாற்றம் என்பது இப்போது உலகில் பரவும் மிக முக்கியமான பாதிப்பாக இருக்கிறது. இது உலகின் இயற்கை வளங்களைப் பாதிப்பதாகவே இத்தனை காலம் நினைத்து இருப்போம்.

வல்லுநர்கள்: ஆனால், அத்துடன் சேர்த்து இது மனிதர்களின் உடல்நிலையையும் மிக மோசமாகப் பாதிப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக டெங்கு பாதிப்பு பருவநிலை மாற்றத்தால் இப்போது வேகமாகப் பரவ தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்பு பரவிய இடங்களைக் காட்டிலும் வேறு பல புதிய இடங்களில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பாதிப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பும் கூட கடந்த 2023ல் எச்சரித்துள்ளது. இப்போது உலகில் சரிபாதி நபர்கள் இந்த நோயின் அபாயத்தில் உள்ளனர்.
பரவும் கொசுக்கள்: குறிப்பாக இந்த காலநிலை மாற்றத்தால் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் அபாயகரமான அளவில் பரவி வருகிறது. அதிகரிக்கும் வெப்பம், பருவம் மாறிய பெய்யும் மழை ஆகியவை கொசுக்கள் செழித்து வளர சிறந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன.. கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் நிலையில், அதன் ஆயுட்காலமும் அதிகரிக்கின்றன.
இதனால் டெங்கு கேஸ்கள் உலகெங்கும் அதிகரிக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் கொரோனாவை போல டெங்கு அடுத்த பெருந்தொற்றாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
125 நாடுகள்: டெங்கு ஏற்கனவே 125 நாடுகளில் எண்டெமிக் நோய்களாக இருக்கிறது. அதாவது உலக மக்கள் தொகையில் 40% இதன் ஆபத்தில் உள்ளனர். இந்த பருவநிலை மாற்றத்தால் இந்த நோய் மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக 2050இல் டெங்கு கேஸ்கள் தற்போது பதிவாவதைக் காட்டிலும் 50% அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் தீவிர டெங்கு பாதிப்புகள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
டெங்கு மட்டுமின்றி மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ் எனக் கொசுக்களால் பரவும் மற்ற வைரஸ்களும் இப்போது அதிகமாகப் பரவி வருகிறதாம். உலகம் வெப்ப மயமாதல் காரணமாக நமது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள் மாறுகிறது. இது கொசுக்கள் தங்களை தாங்களே தகவமைத்து புதிய பகுதிகளுக்குப் பரவ அனுமதிக்கிறது. இப்போது சர்வதேச வர்த்தகம், சுற்றுலா அதிகரித்துள்ள நிலையில், இவையும் நோய்கள் பரவுவதற்கான சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
காலநிலை மாற்றம்: உலகில் இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக எச்சரிக்கும் வல்லுநர்கள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், பொதுச் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உடனடி நடவடிக்கை தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாகக் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது ரொம்பவே முக்கியம். மேலும், டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குவதும் முக்கியமானதாக மாறி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கத் தவறினால் டெங்கு உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் சுகாதார அமைப்புகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தின் மீதும் இது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஆபத்து: குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏழைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். நடவடிக்கை எடுக்கத் தவறினால் டெங்குவால் உலகமே முடங்கும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications