"D கம்பெனி.." கூடவே அந்த 2 பேர்! தாவூத் இப்ராஹிம் நகர்த்திய காய்! மும்பையை அலற விட்ட பின்னணி
டெல்லி: இந்தியாவின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகும் நிலையில், அவர் மும்பையில் அரங்கேற்றிய மிக மோசமான குண்டுவெடிப்பு குறித்து நாம் பார்க்கலாம்.
1980, 1990களில் மும்பையில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராஹிம் கடந்த சில ஆண்டுகளாகப் பாகிஸ்தானில் இருந்து வந்தார். பாகிஸ்தான் இதை மறுத்தாலும், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்யும் விதமாகத் தொடர்ச்சியாகப் பல தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது அடையாளம் தெரியாத நபரால் தாவூத் இப்ராஹிம் விஷம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் பரவின. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தாவூத் இப்ராஹிம்: இந்தியாவில் அதிகம் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தாவூத் இப்ராஹிம், ஒட்டுமொத்த நிழல் உலகையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும், அவர் குறித்து இதுவரை ஓரிரு போட்டோ மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும், பல முக்கிய புள்ளிகளாலும் கூட அவரால் நேரடியாகப் பேச முடிந்தது இல்லை. அந்தளவுக்கு நிழல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் நபராகவே தாவூத் இப்ராஹிம் இருந்தார்.
இந்தியாவில் organized crime எனப்படும் திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களின் முகமாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். இப்படி அவருக்குப் பல கொடூர முகங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மும்பை குண்டுவெடிப்பு என்பது இந்திய வரலாற்றில் அழிக்கவே முடியாத வடுவாக இருந்தது. இதில் பின்னணியில் இருந்ததும் தாவூத் இப்ராஹிம் தான்.
உச்சக்கட்ட பதற்றம்! தாவூத் இப்ராஹிம் விஷம் வைத்து கொலை? பாகிஸ்தான் முழுக்க இணைய சேவை முடக்கம்! பகீர்
மும்பை குண்டுவெடிப்பு: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்திய வரலாற்றில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த 1993இல் மும்பையின் இதய பகுதிகளில் 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. மிகவும் துல்லியமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த மோசமான பயங்கரவாத தாக்குதல் தான் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை சர்வதேச பயங்கரவாதியாக மாற்றியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பதிலடியாக இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாகக் கூறப்பட்டது.
என்ன காரணம்: இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்து மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், பாபர் மசூதியை அழித்ததற்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வகுப்புவாத வன்முறைக்கும் பழிவாங்க இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தார்.
தாவூத் டி-கம்பெனி என்று அழைக்கப்படும் சர்வதேச க்ரைம் சிண்டிகேட் ஒன்றை நடத்தி வந்தார். இந்த டி கம்பெனி மூலம் டைகர் மேமன் மற்றும் யாகூப் மேமன் ஆகியோரின் உதவியுடன் இந்த குண்டுவெடிப்புகளை அவர் நடத்தினார், இது தொடர்பாக வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த நிலையில், யாகூப் மேமனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இருப்பினும், மற்ற முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் தலைமறைவாகவே உள்ளனர்.
தப்பிச் சென்றார்: இந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் கூட தங்கக் கடத்தல், ரியல் எஸ்டேட், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை தாவூத் செய்து வந்தார். அப்போது கொலை வழக்கு ஒன்றிலும் மும்பை போலீசார் அவரை தீவிரமாகத் தேட தொடங்கிய நிலையில், அவர் 1986இல் இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பிறகு, அவர் சில காலம் துபாயில் தங்கியிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் தகவல் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications