உள்ளே இறங்கிய மொசாட்.. அடுத்த நொடி ஈரானுக்கு விழுந்த மரண அடி! ஆபரேஷன் "ரைசிங் லயன்" விஷயமே வேற
ஜெருசலேம்: இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஈரான் டாப் ராணுவ தலைவர்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே இந்த தாக்குதலை இஸ்ரேல் எப்படி நடத்தியது.. இதற்காக மொசாட் எப்படி விரிவான திட்டத்தைப் போட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் யாருமே எதிர்பார்க்காத ஒரு உளவு மற்றும் ராணுவ நடவடிக்கையின் மூலம் ஈரானைக் கடந்த வாரம் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு, மிகத் துல்லியமான தாக்குதலாக இது இருந்தது. உளவு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ராணுவம் ஈரான் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை அமைப்புகளை முடக்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இரவோடு இரவாக
போர் விமானங்களையும், ஆயுதம் தாங்கிய சிறியரக விமானங்களையும் இரவோடு இரவாக ஈரானுக்குள் கடத்திச் சென்று இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இது ஈரானை நிலைகுலையச் செய்தது என்பதே உண்மை.
இது தொடர்பாகத் தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரும், மொசாட்டின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநருமான சிமா ஷைன் கூறுகையில், "ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் குறிவைத்து மொசாட் பல ஆண்டுகளாக மேற்கொண்ட சீக்ரெட் ஆபரேஷனின் ரிசல்ட் தான் இந்த தாக்குதல்" என்றார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்ததால் இப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என ஈரான் நினைத்திருந்ததும் இஸ்ரேலுக்குச் சாதகமாக அமைந்தது.
எதிர்பார்க்காத ஈரான்
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமனில் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பு வெள்ளிக்கிழமையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "ஆபரேஷன் ரைசிங் லயன்" நடவடிக்கையைத் தொடங்கினார். டொனால்ட் ட்ரம்பிற்கு தெரிவிக்கப்பட்ட பிறகே இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது..
இந்த தாக்குதலுக்காக மொசாட்டும், ஈரான் ராணுவமும் குறைந்தது மூன்று வருடங்கள் கிரவுண்ட் வொர்க் செய்ததாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த அக்டோபரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களின்போது ஈரான் வான் பாதுகாப்பு எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்து கொண்டது.
கடத்தி சென்ற மொசாட்
மொசாட் ஏஜெண்டுகள் துல்லியமாகத் திட்டமிட்டு ஆயுதங்களை ஈரானுக்குள் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "சிறிய ஆயுதங்கள், டிரோன்களை மொசாட் ஏஜெண்டுகள் தங்கள் வாகனங்களில் மறைத்து ஈரான் நாட்டில் கடத்தி சென்றனர். ஈரான் வான் பாதுகாப்பு தளங்களுக்கு மிக அருகே மொசாட் ஏஜெண்டுகள் இந்த ஆயுதம் இருக்கும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர். மிக அருகில் இருந்து பாய்ந்ததாலேயே ஈரானால் இஸ்ரேல் ஏவுகணைகளை எதுவும் செய்ய முடியவில்லை" என்றார்.
உள்ளே வந்த ஏஐ
அதேபோல சேகரிக்கப்பட்ட தகவல்களை எல்லாம் ஆய்வு செய்யச் செயற்கை நுண்ணறிவை இஸ்ரேல் பயன்படுத்தி இருக்கிறது. டேட்டாவை விரைவாக பிராசஸ் செய்யவே இஸ்ரேல் தனது ஏஐ டூல்களை பயன்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபரிலேயே இந்த பணிகளை இஸ்ரேல் தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஏஐ மூலம் இஸ்ரேல் உளவு டேட்டாவை பகுப்பாய்வு செய்துள்ளது. மேலும், ஈரானின் தகவல் தொடர்பையும் இடைமறித்து தேவையான பல உளவு டேட்டாவை இஸ்ரேல் தெரிந்து கொண்டிருக்கிறது.
பக்கா பிளான்
இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகையில், "முதலில் தலைவர்கள் எங்குள்ளனர்.. ராணுவ தளங்கள், பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றை தனித்தனியாகப் பிரிப்போம். ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடையவர்கள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்தால் அவர்கள் இலக்குகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏனென்றால் இந்த படை தான் ஈரான் ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் குறித்து எல்லா டேட்டாவும் ரெடி செய்தோம். பிறகே தாக்குதலை ஆரம்பித்தோம்" என்றார்.
ஈரானுக்கு விழுந்த அடி
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் ஈரான் ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் முகமது பாகேரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்ரைனும் கூட இதுபோலத் தான் ரஷ்யாவுக்குள் தனது டிரோன்களை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications