ஹமாஸ் படையின் குண்டு மழை.. அலறும் இஸ்ரேல் மக்கள்.. காரணமே இந்த அமெரிக்கா தானாம்! பின்னணி என்ன
டெல் அவிவ்: இஸ்ரேல் உட்பட யாருமே எதிர்பார்க்காத மெகா தாக்குதலை நேற்று ஹமாஸ் படை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்துத் தெரியுமா.. அது குறித்து நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் நாட்டில் நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத பல ஷாக் சம்பவங்கள் அரங்கேறின. நேற்று அதிகாலையில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கிப் பல ஆயிரம் ஏவுகணைகள் சரமாரியாகப் பாய்ந்தது. இதை இஸ்ரேலின் அயர்ன் டோம் அமைப்பால் தடுக்க முடியவில்லை.

மேலும், பாரசூட் மூலமாகவும் போட், ஜீப் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தினர். இஸ்ரேல் நாட்டில் சமீப காலங்களில் ஏற்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.
அமெரிக்கா கனெக்ஷன்: இந்தத் தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் மீது சமீபத்திய ஆண்டுகளில் நடந்ததிலேயே மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது. இந்த தாக்குதல் நடந்த நேரமும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் வேண்டும் என்றால் இஸ்ரேல் உடன் நல்லுறவை ஏற்படுத்துமாறு சவுதி அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இஸ்ரேல் இந்த மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கா காலம் காலமாக இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. அவர்கள் சவுதிக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ஹமாஸ் படை இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

அமைதிக்கு வாய்ப்பே இல்லை: ஏவுகணை தாக்குதல் மட்டுமின்றி, இஸ்ரேலிய நகரங்களுக்குள் நுழைந்த ஹமாஸ் வீரர்கள் 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்றுள்ளனர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றுள்ளனர். இஸ்ரேல் தனது நாட்டில் நிரந்தரமாக அமைதி வேண்டும் என விரும்பினால், அதைப் பாலஸ்தீனத்தைப் புறக்கணித்துவிட்டு ஏற்படுத்த முடியாது என்ற மெசேஜ் அனுப்பவே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஹமாஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட வீடியோவில், "நீங்கள் யாருடன் எந்த ஒப்பந்தம் போட்டாலும் என்ன செய்தாலும் இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முடியாது.. இப்பகுதியில் நிரந்தரமாக அமைதி திரும்ப வேண்டும் என்றால் இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதே அதன் தொடக்கப் புள்ளியாக இருக்கும். சிலர் (சவுதி) துரதிர்ஷ்டவசமாக தங்களைப் பாதுகாக்க அமெரிக்காவால் முடியும் என்று நினைக்கிறார்கள். இதனால் அவர்கள் இஸ்ரேல் உடன் நெருக்கம் காட்டுகிறார்கள். ஆனால் அது நிச்சயம் பலன் தராது." என்று கூறியிருந்தார்.
அழுத்தம்: அதாவது அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் காட்டி சவுதிக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனால் சவுதி வேறு வழியில்லாமல் இஸ்ரேல் உடன் நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் நேரத்தில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத வரை என்ன நடவடிக்கை எடுத்தாலும் இங்கே அமைதி திரும்பாது என்பதையே ஹமாஸ் படை சொல்ல வருகிறது.
இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "இந்த மெசேஜ் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் சவுதி அரேபியாவிற்கும், அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் உறவை மேம்படுத்த முயலும் அமெரிக்கா என இரு தரப்பிற்கும் தான். பாலஸ்தீனர்கள் விவகாரத்தில் தீர்வு கொடுக்காத வரை இந்த பிராந்தியத்தில் அமைதி திரும்ப வாய்ப்பே இல்லை என்பதையே இவர்கள் சொல்ல வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications