ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடியை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்.. பேஸ்புக் பிழைக்குமா!
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மார்க் ஜூக்கர்பெர்க் பங்கு வர்த்தகத்தில் ரூ.3 லட்சம் கோடியை இழந்து இருக்கிறார்.
நியூயார்க்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மார்க் ஜூக்கர்பெர்க் பங்கு வர்த்தகத்தில் ரூ.3 லட்சம் கோடியை இழந்து இருக்கிறார். வரும் நாட்களில் இதன் மதிப்பும் இன்னும் அதிகம் ஆகும் என்று கூறப்படுகிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

டெலிட் பேஸ்புக்
இதனால் சமூக வலைதளத்தில் டெலிட் பேஸ்புக் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆனது. பலரும் பேஸ்புக் அப்ளிகேஷனை தங்கள் மொபைலில் இருந்து நீக்கினார்கள். பெரிய பிரபலங்கள் கூட தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு பேஸ்புக்கில் இருந்து விலகினார்கள்.

இழப்பு
இதனால் தற்போது பங்கு வர்த்தகத்தில் 3 சதவிகிதம் வரை தினமும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. முதல் நாள் ரூபாய் 1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு, பேஸ்புக்கில் தகவல் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட பின் இழப்பு ரூபாய் 3 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.

பேஸ்புக் பிழைக்குமா
மார்க் ஜூக்கர்பெர்கின் சொத்து மதிப்பும் மொத்தமாக குறைந்து இருக்கிறது. ரூபாய் 4.8 லட்சம் கோடியில் இருந்து ரூபாய் 4 லட்சம் கோடியாக குறைந்து இருக்கிறது. இந்த நிலைமை இன்னும் தொடர்ந்தால் அடுத்த ஒரு வாரத்தில் மார்க் மிக அதிகமான தொகையை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

பலருக்கு
மேலும் பேஸ்புக் காரணமாக இன்னும் சில சமூக வலைதளங்களுக்கும் மதிப்பு குறைந்து இருக்கிறது. டிவிட்டர், ஸ்னாப்சாட், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 10 சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்தித்தது. பேஸ்புக்கை டெலிட் செய்யும் வழக்கம் தொடர்ந்தால் இதில் இன்னும் கூட வீழ்ச்சி ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications