"எவ்வளவு நேரம் உயிரோடு இருப்பேன்னு தெரியவில்லை".. இடிபாடுகளில் சிக்கிய சிறுவன்.. கண்ணீர் வீடியோ
"பசி தாங்க முடியவில்லை. திடீரென மயக்கம் வருகிறது. இன்னும் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை"
இஸ்தான்புல்: துருக்கியில் நிலநடுக்கத்தால் கட்டிடம் விழுந்து இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 10 வயது சிறுவன் ஒருவன், தான் இன்னும் எவ்வளவு நேரம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை என்று கண்ணீர்மல்க பேசி வீடியோ வெளியிட்டிருப்பது காண்போரின் நெஞ்சை கலங்க வைப்பதாக உள்ளது.
கட்டிட இடிபாடுகளுக்கு 6 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி இருக்கும் அந்த சிறுவன், தன்னால் பசி தாங்க முடியவில்லை என்றும், தன்னை எப்படியாவது மீட்டு விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளான்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, அந்த சிறுவன் கூறிய பகுதியில் மீட்புப் பணிகளை ராணுவத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உருக்குலைந்த துருக்கி
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்நாடுகளை உருக்குலைய செய்துவிட்டது. இரண்டு நாடுகளிலும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துவிட்டனர். தினம் தினம் கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை லட்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இயற்கையின் இந்த கோரத் தாண்டவத்துக்கு பிறகு அந்த இரு நாடுகளும் மீண்டு வர முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

கலங்க வைக்கும் சம்பவங்கள்
இது ஒருபுறம் இருக்க, அந்நாடுகளில் நாள்தோறும் நடைபெறும் மீட்புப் பணிகளின் போது நெஞ்சை பிசையும் சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நிலநடுக்கத்தில் மரணம் அடைந்த தனது 15 வயது மகளின் கையை மூன்று நாட்களாக விடாமல் பிடித்தபடி இருக்கும் ஒரு தந்தையின் புகைப்படம் உலகையே சுழற்றி போட்டது. அதேபோல், தந்தை - தாயை இழந்த குழந்தைகள் மீட்கப்படுவதும், அவை தங்களுக்கு நேர்ந்த துயரத்தை அறியாமல் சிரித்து விளையாடுவதும் கல் மனதையும் கரைப்பதாக உள்ளது.

உயிருக்கு போராடும் சிறுவன்
இந்நிலையில், இன்றும் அப்படியொரு வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் 6 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருக்கும் 10 வயது சிறுவன் ஒருவன்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளான். அவனது தலையிலும் முகத்திலும் ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது. அதில், "என்ன நடந்தது எனத் தெரியவில்லை. பயங்கர சத்தம் கேட்டது. விழித்து பார்த்தால் என் மீது பெரிய பெரிய கற்கள் விழுந்து கிடக்கின்றன. என் அம்மா அப்பா என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.

"உயிருடன் இருப்பேனா தெரியவில்லை"
தலையில் ஏற்பட்ட காயம் மிகவும் வலிக்கிறது. தண்ணீரும், உணவும் இல்லாமல் இருக்கிறேன். பசி தாங்க முடியவில்லை. திடீரென மயக்கம் வருகிறது. இன்னும் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை. செல்போனில் சார்ஜும் முடியப்போகிறது. வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என அந்த சிறுவன் கூறுகிறான். நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோவை பார்த்த ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் அந்த சிறுவன் கூறிய பகுதியில் வேகமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications