தாயகம் திரும்பினார் ஹீரோ அபிநந்தன்.. வாகா எல்லையில் வானை பிளந்த கரகோஷம்.. இந்தியாவிடம் ஒப்படைப்பு!
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று மதியம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட, இரண்டு நாட்கள் அங்கு இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வாகா எல்லையில் அவர் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மொத்தமாக தணிந்து இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்களுக்கு போரின் மீது விருப்பம் இல்லை என்று நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
இந்த நிலையில் அந்நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானியை விடுவிக்க போவதாகவும் கூறினார். தற்போது அதேபோல் அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறைபிடிக்கப்பட்டார்
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் 21 விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார்.
கேள்விகள்
ஆனால் இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக இந்தியா உலக நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. அதேபோல் ஜெனிவா ஒப்பந்தம் குறித்து நிறைய விவாதங்கள் செய்யப்பட்டது.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார். அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார். அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார்.
வாகா
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் உள்ள அபிநந்தன் விமானம் மூலம் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா எல்லை கொண்டு வரப்பட்டார். லாகூரிலிருந்து அவர் கார் மூலமாக, வாகா எல்லை அழைத்துவரப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்டார்
இதையடுத்து இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் அவர் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்தார். ராணுவ அதிகாரிகள், முக்கிய பாதுகாப்பு படை வீரர்கள் இதனால் இன்று வாகா எல்லைக்கு வந்திருந்தனர். எல்லைக்குள் வந்த அபிநந்தனை இந்திய விமானப்படை வரவேற்றது. பாகிஸ்தான் ராணுவம், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் அபிநந்தனை ஒப்படைந்தனர்.
பாதுகாப்புத்துறை அதிகாரிகள், முப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அங்கு அபிநந்தனை வரவேற்றனர்.
பெரிய வரவேற்பு
எப்போதும் வாகா கதவுகள் திறக்கும் போது அதை காண மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை பாதுகாப்பு கருதி, நிகழ்வு நடக்கும் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வெளியில் மக்கள் பெரிய அளவில் கரகோஷம் எழுப்பி அபிநந்தனை வரவேற்றார்கள். கரகோஷங்கள் விண்ணை பிளக்க அபிநந்தன் இந்தியாவிற்கு அடியெடுத்து வைத்தார்.