பாகிஸ்தான் நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால்தான் நிதியை வழங்கினோம்.. ஐஎம்எப் சமாளிப்பு
வாஷிங்டன்: பஹல்காம் தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வந்த நிலையில், சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் நிதி உதவியை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது ஐஎம்எஃப் விளக்கமளித்திருக்கிறது.
செய்தியாளர்களை சந்தித்த ஐஎம்எஃப்-ன் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக், ஐஎம்எஃப் கொடுத்த அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பூர்த்தி செய்துவிட்டது. எனவேதான் நிதியை விடுவித்தோம் என்று கூறியுள்ளார்.

கோசாக் கூறியதாவது, "பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவது என்று எடுக்கப்பட்டிருந்த முடிவை, கடந்த ஆண்டு செப்டம்பரில் நாங்கள் மறு ஆய்வு செய்திருந்தோம். அதன் அடிப்படையில் மே 9ம் தேதி இரண்டாவது கட்டமாக அந்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்பட்டது. மறு ஆய்வின்போது, திட்டம் சரியான பாதையில் செல்கிறதா, திட்டத்தின் கீழ் உள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா, திட்டத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர ஏதேனும் கொள்கை மாற்றங்கள் தேவையா என்பதை நாங்கள் ஆய்வு செய்தோம்.
பாகிஸ்தான் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்திருக்கிறது. சில சீர்திருத்த நடவடிக்கைகளிலும் அது முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனவேதான் நாங்கள் அடுத்தக்கட்ட நிதியை விடுவித்தோம். நாங்கள் இதற்கு முன்னர் கொடுத்த நிதி அனைத்தும் அந்நாட்டின் மத்திய வங்கி கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஐஎம்எஃப் பாகிஸ்தானுக்கு EFF திட்டத்தின் கீழ் நிதி உதவியை செய்து வருகிறது. இது நீண்டகால நிதி உதவித் திட்டமாகும். 3-4 ஆண்டுகள் வரை இந்த நிதியுதவி பிரித்து பிரித்து வழங்கப்படும். வெளிநாட்டு கடன் சுமை அதிகமாக இருக்கும் நாடுகள், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்த நாடுகள், இறக்குமதி/ஏற்றுமதி சமநிலை பலவீனமாக இருக்கும் நாடுகள் ஆகியவற்றுக்கு ஐஎம்எஃப் இந்த உதவியை செய்து வருகிறது.
ஆனால் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது நிரூபணமாகி இருக்கும் இந்த நேரத்தில், ஐஎம்எஃப் எப்படி நிதியுதவி வழங்கலாம் என்பதுதான் கேள்வி. கடந்த 16ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கேள்வியை வெளிப்படையாக எழுப்பியிருந்தார். மட்டுமல்லாது, ஐஎம்எஃப் பாகிஸ்தானுக்கான தனது நிதியுதவி திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து இந்தியாவிலிருந்து ஐஎம்எஃப் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இப்படி இருக்கையில்தான் ஐஎம்எஃப் அதிகாரி சப்பைக்கட்டு கட்டியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இந்த அமைப்பு லக்ஷர் இ தொய்பா அமைப்பின் கிளையாகும். இந்த அமைப்புக்கும் பாகிஸ்தானின் அரசு உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications