ஈரான் உடன் டீல் பேசும் IMO.. வளைகுடா கடலில் சிக்கிய கப்பல்களுக்கு விடிவுகாலம்
சர்வதேச கடல் அமைப்பு (IMO - International Maritime Organization) பெர்ஷியன் வளைகுடாவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான கப்பல்களை மீட்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஏழு வாரங்களுக்கு மேலாக இந்தக் கப்பல்கள் இதே பகுதியில் சிக்கியுள்ளன. பல கப்பல்களில் உணவு பொருட்கள் இல்லாமல் தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
ஒருபக்கம் அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்களை டார்கெட் செய்து நிற்கிறது, மறுப்புறம் ஹார்முஸ் நுழைவுவாயிலில் ஈரானின் IRGC படை மொத்தமாக இப்பாதையை முடக்கியுள்ளது. இதனால் வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய், எரிவாயு, சரக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் பெர்ஷியன் வளைகுடாவிலேயே 54 நாட்களாக முடங்கியுள்ளது.

பெர்ஷியன் வளைகுடாவிற்குள் அமெரிக்க கடற்படை இல்லாத காலக்கட்டத்தில் தினமும் 10-20 கப்பல் IRGC அனுமதியுடன் ஹார்முஸ் வாயிலாக சென்ற நிலையில் தற்போது மொத்தமாக இப்பாதை முடங்கியுள்ளது. இதேவேளையில் நாளை பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
சர்வதேச கடல் அமைப்பின் செயலாளர் அர்செனியோ டொமிங்குயெஸ் சிங்கப்பூர் மரைன் வீக் நிகழ்ச்சியில் பெர்ஷியன் வளைகுடாவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான கப்பல்களை மீட்கும் திட்டம் குறித்த தகவலைத் தெரிவித்தார்.
போர் நிறுத்த அறிகுறி தேவை
இந்த மீட்புத் திட்டம் உடனடியாக அமலுக்கு வராது. போர் பதற்றம் குறைந்து, தெளிவான போர் நிறுத்த அமைதி சூழ்நிலையில் தெரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அர்செனியோ தெரிவித்தார். கப்பல்களில் சிக்கியுள்ள குழுவினரின் தங்கல் கால அளவை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை வெளியேற்றும் வரிசை மற்றும் பிற காரணிகளை கருத்தில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
1968-ம் ஆண்டு போக்குவரத்து திட்டம்
கப்பல்கள் வெளியேறும் போது, ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் 1968-ல் IMO-வுக்கு முன்மொழிந்த Traffic Separation Scheme (போக்குவரத்து பிரிவினை திட்டம்) எனும் நீண்டகால முறையைப் பின்பற்ற வேண்டும் என்று டொமிங்குயெஸ் கூறினார். இந்த முறை இன்றும் செல்லுபடியாகும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது சர்வதேச கடல் அமைப்பு (IMO).
ஈரான் தனது நாட்டு கடற்கரை அருகே ஒரு குறிப்பிட்ட பாதையை உருவாக்கி அதில் தான் கப்பல்கள் செல்லவும், வெளியேறவும் வேண்டும் என அறிவித்துள்ளது. மற்ற இடங்களில் கடல் கண்ணிவெடிகள் வைத்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளது. அப்படி வெளியேறும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது.
IMO தற்போது ஈரான், ஓமன் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்த திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. போர் பதற்றம் தொடர்ந்தாலும், அமைதி அறிகுறிகள் தென்பட்டவுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்ஷியன் வளைகுடா உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழியாகும். இங்கு கப்பல்கள் சிக்கியிருப்பது உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications