நெருங்கும் தீபாவளி... வண்ண விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் சிங்கப்பூர் 'லிட்டில் இந்தியா'
தீபாவளி பண்டிகை கொண்டாட சிங்கப்பூர் இந்தியர்கள் தயாராகிவிட்டனர். அதற்காக தெருவெங்கும் வண்ண விளக்குகளால் தோரணங்கள் தெருவை அலங்கரிக்கின்றன.
சிங்கப்பூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா நகரமெங்கும் வண்ணவிளக்கு அலங்காரம் களைகட்டியுள்ளது.
சிங்கப்பூரில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பல லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அதனால் அங்கு இந்திய பண்டிகைகள் இந்தியாவில் கொண்டாடப்படுவதைப் போலவே விமரிசையாகக் கொண்டாடப்படும்.
இந்தாண்டு தீபாவளி வரும் 19ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அதனையடுத்து சிங்கப்பூர் நகரின் லிட்டில் இந்தியா பகுதியில் அழகான வண்ண விளக்குகளான அலங்காரமும் தெருவெங்கும் ஜொலிக்கும் வகையில் பல வண்ணத் தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன.

தீபாவளிக் கோலம்
தீபாவளிக்காக வாசலில் தீப கோலங்கள் வரைவதுண்டு. சிலர் மணிக்கணக்காக செலவிட்டு அழகான ரங்கோலிக் கோலங்களைத் தீட்டுவார்கள். அதைபோல சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் வண்ண அலங்காரத்தில் தீபக் கோலமும் ரங்கோலிக் கோலமும் கொண்ட அலங்காரம் செய்யபப்ட்டுள்ளது.

தமிழில் வாழ்த்துகள்
தீபாவளிக்கு அனைவருக்கும் வாழ்த்து சொல்லும் விதமாக தீபாவளி நல் வாழ்த்துகள் என தமிழில் எழுதி அது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அரசர் கால விழா
நான்மாடத் தூண்களை நினைவுக்கூரும் வகையில் தெரு நெடுக தூண்கள் இருப்பது போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது இலக்கியங்களில் அரசர் காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதை நிகழ்காலத்தில் காட்டுவது போல் உள்ளது.

கலர்புல் தீபாவளி
சிங்கப்பூர் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் அழகிய வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இரவு நேரங்களில் அவை மிளிரும்போது காண்போர் மனம் மயங்கும் வண்ணம் உள்ளது.
செய்தி: தங்கமணி கணேசன்












Click it and Unblock the Notifications