இந்தியாவை விரைவில் எரித்து சாம்பலாக்குவோம்.. லஷ்கர் புது சூளுரை
இந்தியாவை விரைவில் சாம்பலாக்குவோம் என்று லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கராச்சி: இந்தியாவுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. அதை விரைவில் சாம்பலாக்குவோம் என்று லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பிஜ்பேகரா அருகேயுள்ள கர்போரா அர்வானி பகுதியில் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் கூட்டாக இணைந்து அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
பதிலடி தாக்குதல்
பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்ததில் லஷ்கர் ஏ தொய்பா முக்கிய தளபதி ஜூனைத் மட்டூ உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எனினும் அவர்களின் சடலங்கள் கைப்பற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பழிவாங்கும் நடவடிக்கை
இதற்கிடையே அசாபால் பகுதியில் நேற்று மாலை, போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சப் இன்ஸ்பெக்டர் பிரோஸ் தர் உள்ளிட்ட 6 போலீஸார் வீர மரணமடைந்தனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
தீவிரவாத அமைப்பின் அறிக்கை
தங்கள் அமைப்பின் முக்கிய தளபதியை போலீஸார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா காஸ்நவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் அமைப்பினரின் தியாகங்கள் வீண் போகாது. எங்கள் இயக்கத்தின் இறந்த வீரர்களின் தூய்மையான ரத்தம் இந்தியாவுக்கு அழிவை ஏற்படும் என்பதை நீருபிக்கும். முஜாஹிதீன் அமைப்பை அழிக்க இந்த பூமியில் யாருக்கும் சக்தி இல்லை.
இந்தியா ஒரு புற்றுநோய்
மனித இனத்துக்கும், மனத உரிமை மீறலுக்கும், அன்புக்கும், நல்லிணக்கத்துக்கும் இந்தியா ஒரு புற்றுநோயாகும். எங்கள் அமைப்பினரால் கொழுந்து விட்டு எரியும் தீயானது நிச்சயம் இந்தியாவின் ஒவ்வொரு செங்கல்லையும், கற்களையும் தாக்கும். விரைவில் இந்தியா சாம்பலாகும். ரமலான் நோன்பு காலம் என்பது அல்லாவின் ஆசிகள் கிடைக்கும் மாதமாகும்.
அழிவு நெருங்கிவிட்டது
எனவே இந்தியா அதன் அழிவுகாலத்துக்குள் சென்றுவிட்டது. இந்தியா ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த அப்பாவிகள் மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதல்களே போதுமானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.