எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடம்: அசாம், பீகார், மபியில் அதிகம்!
நியூயார்க்: உலக அளவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது.
எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

ஆப்ரிக்கா முதலிடம்:
அதன்படி, ஆசியா பகுதியில்எய்ட்ஸ்க்கு காரணமாக எச்.ஐ.வி கிருமி தொற்று உள்ளவர்கள் வரிசையில் ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

3வது இடத்தில் இந்தியா:
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

21 லட்சம் பேர் பாதிப்பு:
கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

இறக்கும் நோயாளிகள்:
இந்தியாவில் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் 36 சதவீதம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாகவும், 51 சதவீதம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவதாகவும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

உயர்ந்துள்ள எண்ணிக்கை:
புதிதாக நோய் தாக்குவோர் எண்ணிக்கை 19 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

அசாம், பீகார், மபியில் அதிகம்:
பாலியல் தொழில் மூலமாக நோய் பரவும் சதவீதம் 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. சபை தன்னுடைய ஆய்வில் வெளியிட்டுள்ளது.