துபாயில் இந்திய தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் வயலார் ரவி
துபாய்: துபாயில் இந்திய தொழிலாளர்களுக்கான மஹாத்மா காந்தி பிரவாஸி சுரக்ஸா யோஜனா எனும் ஓய்வூதியத் திட்டத்தினை மத்திய அமைச்சர் வயலார் ரவி 28.10.2013 அன்று மாலை இந்திய கன்சுலேட் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் துவக்கி வைத்தார்.

அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஈ.ஸி.ஆர். பாஸ்போர்ட்டுடன் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் துவங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அமீரகத்தை தேர்வு செய்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஈ.ஸி.ஆர். பாஸ்போர்ட்டுடன் பணிபுரியும் வெளிநாடு வாழ் இந்தியர் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலான ஓய்வூதியத் திட்டத்தினை மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி துவக்கி வைத்தார். ஓய்வூதியத் திட்டத்திற்கான பத்திரங்களை தொழிலாளர்களுக்கு வழங்கினார். இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பலர் பயன் பெறுவர். இது தனது கனவுத் திட்டம் எனக் குறிப்பிட்டார் அவர்.

வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் இணைச் செயலாளர் இக்பால் சிங் பைன்ஸ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் துபாய் இந்திய கன்சுலேட்டின் துணை கன்சல் ஜெனரல் அசோக்பாபு உள்ளிட்ட அதிகாரிகள், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன், ஈடிஏ மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா, ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், செய்தியாளர் முதுவை ஹிதாயத், ஈடிஏ நலத்துறை அலுவலர்கள் டாக்டர் லதா, பாலரசு, முஹம்மது கனி உள்ளிட்டோரும், ஈடிஏ நிறுவன தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களின் தூதர்கள், அமீரக தொழில் அதிபர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications