ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் உறுப்பினராக சேர்ப்பு
உஃபா: பெய்ஜிங்கை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் Shanghai Cooperation Organisation (SCO) இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இந்தியாவை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த அமைப்பில் பார்வையாளராகத்தான் இந்தியா இருந்தது. இந்த நிலையில் நேற்று நடந்த இந்த அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதில் ரஷ்யா அதிபர் புதின், சீனா அதிபர் ஷின்பிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆகியோரும் பங்கேற்றனர். இம்மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் இந்தியாவை முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டன.
இதேபோல் பாகிஸ்தானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நடைமுறைகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்.
இந்தியாவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டு இருப்பது வரலாற்று பூர்வ, இயற்கையான இணைப்பை பிரதிபலிக்கிறது. இது நமது மிகப்பெரிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் சுபிட்சத்தை மேம்படுத்த உதவதாகவும் அமையும். நாம் அனைவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து நமது பிராந்தியம் அனைத்துக்கும் மிகவும் அச்சுறுத்தலாக திகழும் தீவிரவாதத்தை ஒடுக்க செயலாற்றவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications