முடிவுக்கு வந்த மோதல்.. மீண்டும் போர் வராமல் இருக்க பாக். அடக்கி வாசிக்க வேண்டும்! இதை செய்யக்கூடாது
இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் எனில், அங்கிருந்து வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் எனில், அதை போராகவே கருதப்படும் என்று இந்தியா கூறியிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் போர் தொடங்காமல் இருக்க பாகிஸ்தான் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள மோதலுக்கு காரணமே பாகிஸ்தான். எனவே மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு இருக்கிறது.

பாகிஸ்தான் இதற்கு பின்னர் செய்ய வேண்டியது தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதுதான். அதாவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பலூசிஸ்தான் பகுதியிலும் தீவிரவாதிகளின் இயக்கம் அதிகமாக இருக்கிறது. இது பல நேரங்களில் பாகிஸ்தானுக்கே பேக் ஃபயராக அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதிலிருந்து ஒரு விஷயம் தெரிய வந்திருக்கிறது.
அதாவது தனது சொந்த நாட்டில் வளர்ந்து வரும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்தவில்லை. அதை செய்ய தவறிவிட்டது. அல்லது போதுமான சட்டங்கள் இல்லை என்றும் பொருள் கொள்ளலாம். இந்த பின்னடைவை பாகிஸ்தான் உடனடியாக சரி செய்ய வேண்டும். போதுமான சட்டங்களை இயற்றி அதனை கறாராக கடைபிடிக்க வேண்டும்.
ஐநா மனித உரிமை ஆணையமும் சமீபத்தில் இதனை சுட்டிக்காட்டியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் பலுசிஸ்தான் பகுதியில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். உள்ளூர் தீவிரவாத இயங்கங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டாய திருமணம், கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை இந்த பகுதியில் தாராளமாக நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு போலீசும், ராணுவமும் தவறிவிட்டது என்று கூறியிருந்தது.
இந்த கூற்றை உண்மையாக்கும் வகையில் பஹல்காம் தாக்குதுல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லக்ஷ்ர் இ தொய்பா அமைப்பின் கிளையாகும். இந்த அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி வருகிறது என்பது ஊரறிந்த ரகசியம்.
இதனால்தான் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக பாகிஸ்தான் இனி தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை தவிரக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராகவும், அதன் இயக்கங்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தால்தான் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடக்காமல் இருக்கும்.
பாகிஸ்தானிடமிருந்து இந்தியா எதிர்பார்ப்பதும் இதுதான். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது போக போகத்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications