கை மாறும் பவர்.. அமெரிக்க ஆதரவால் ஆட்டம் போடும் ராணுவ தளபதி முனீர்! பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி?
இஸ்லாமாபாத்: அமெரிக்காவில் இருக்கும் அசிம் முனீர் இந்தியா தொடர்பாகவும் அணு ஆயுதங்கள் தொடர்பாகவும் கூறிய சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதற்கிடையே அமெரிக்காவின் ஆதரவு பாகிஸ்தான் ராணுவத்திற்கு இருக்கும் நிலையில், இதனால் அந்த நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி கவிழ்ப்பு கூட நடைபெறலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள டாம்பாவில் பேசிய முனீர் தேவையில்லாமல் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். எதிர்காலத்தில் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் பேசியிருந்தார்.

சர்ச்சைப் பேச்சு
பாகிஸ்தான் ராணுவத் தளபதி மேலும் கூறுகையில், "சிந்து நதிகள் மீது இந்தியா அணை கட்டினால், அது கட்டப்பட்டும் வரை பாகிஸ்தான் காத்திருக்கும். இதனால் நீர்வரத்து பாதிக்கப்பட்டால், இந்திய உள்கட்டமைப்பை பாகிஸ்தான் அழிக்கும்" என்றும் பேசியிருந்தார். அவர் மேலும், "நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. நாங்கள் போரில் அழிகிறோம் என்ற நிலை வந்தால் உலகின் பாதியை எங்களுடன் அழிப்போம்" என்றும் கூட கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் முனீர்
முனீர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். கடந்த 2 மாதங்களில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது அமெரிக்கப் பயணம் இதுவாகும். அமெரிக்காவில் இருந்தபடி அவர் சொல்லியிருக்கும் இந்த அடாவடி கருத்தை இந்தியா உற்றுக் கவனித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தனது உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இந்த முறையும் அசிம் முனீர் கருத்துக்கள் அப்படித் தான் இருக்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ ஆட்சி
பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை என்பதையும், ராணுவம் தான் அங்கு அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையே இந்தக் கருத்துக்கள் காட்டுவதாக இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "அமெரிக்காவின் ஆதரவால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தத் துணிச்சல் வந்துள்ளது. யாருக்குத் தெரியும் அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்து ராணுவம் கூட ஆட்சிக்கு வரலாம்.. அசிம் முனீர் அதிபராக மாறக்கூடும்.
அவருடைய பேச்சுக்கள், தெற்காசியாவில் அணுசக்தி ஸ்திரமின்மையில் சிக்கல் இருப்பதையே காட்டுகிறது. அணு ஆயுதம் கொண்ட நாட்டின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இல்லை.. அணு ஆயுத பட்டனை கையில் வைத்திருக்கும் ராணுவம் இதுபோல பேசுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அணுசக்தி மோதலைத் தடுக்கிறேன் என அதிபர் டிரம்ப் பல முறை பேசியிருக்கிறார். ஆனால், அமெரிக்க மண்ணில் இருந்து முனீர் இதுபோல பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைப் பேசியிருக்கிறார். இதற்காக பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா" என்றும் கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கை இருக்குமா?
இது மட்டுமின்றி இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரையும் உரிமை கோருவது போல முனீர் பேசியிருந்தார். பஹல்காம் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பும் முனீர் இதுபோல பேசியிருந்தார். அதைத் தொடர்ந்தே பஹல்காம் தாக்குதல் நடந்தது. இது தொடர்பாக அந்த மத்திய அரசு வட்டாரம் கூறுகையில், "பஹல்காம் தாக்குதலுக்கு முன், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ முடியாது என்று முனீர் ஒரு கூறியிருந்தார். இப்போது மீண்டும் அதேபோல பேசியிருக்கிறார். பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதற்கான ஒரு சிக்னல் இது! இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications