ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பற்றி திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல்: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் 3 ஆண்டுகளுக்கு முன் தங்கியிருந்த திண்டுக்கல் இல்லத்தில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அந்தோணி மற்றும் மரியதங்கம் தம்பதியரின் மகன் அலெக்ஸிஸ் பிரேம்குமார் .
அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்று அகதிகளின் குழந்தைகளுக்கான கல்விப் பணியை மேற்கொண்டு வந்தார்.
மறுவாழ்வு அமைப்பு:
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பழங்குடி மக்களின் மறுவாழ்வுக்கான பணியை மேற்கொள்ள ஏசு சபையின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
கடத்தப்பட்ட அலெக்ஸிஸ்:
இந்நிலையில் பிப்ரவரி மாதம் சகோதரி சகாயசெல்வியின் வீட்டு விசேஷத்துக்கு வந்த அவர், மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரட் நகருக்குத் திரும்பி உள்ளார். கடைசியாக சகோதரர் மனோகரனுடன் ஜூன் 1 ஆம் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஜூன் 2 ஆம் தேதி அவர் கடத்தப்பட்டார்.
அகதிகள் இல்ல இயக்குநர்:
பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் கடத்தப்பட்டது குறித்து திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் டொமினிக், செய்தியாளர்களிடம், "கடத்தப்பட்ட அலெக்ஸிஸ் பிரேம்குமார் கடந்த 2005 முதல் 2010 வரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார்.
அறக்கட்டளை அமைப்பு:
ஜெ.ஆர் அறக்கட்டளையை ஏற்படுத்தி, அதனை சர்வதேச அமைப்பாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போரில் பாதிக்கப்பட்டவர்கள்:
அங்கு போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
பார்வையிடச் சென்றவர்:
அங்கு ஹெராத் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சோகாதத் கிராமத்தில் போர் அகதிகளின் குழந்தைகளுக்காக ஏசு சபையின் சார்பில் நடத்தப்படுகிற பள்ளிக்கூடத்தை பார்வையிடுவதற்காக கடந்த 2 ஆம் தேதி அலெக்ஸிஸ் பிரேம் குமார், ஆசிரியர்களுடன் சென்றார். அந்தப் பள்ளிக் கூடத்தைப் பார்வையிட்டு விட்டு, அங்கிருந்து அவர் திரும்புவதற்கு தயார் ஆனார்.
தீவிரவாதிகள் கடத்தல்:
அப்போது அங்கே துப்பாக்கி ஏந்தி வந்த தீவிரவாதிகள், கண் இமைக்கும் நேரத்தில் அலெக்ஸிஸ் பிரேம் குமாரை கடத்திச்சென்றனர்.
சிறப்பு பிரார்த்தனைகள்:
தீவிரவாதிகளால் அவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்ததும் பெஸ்கி இல்லத்தைச் சேர்ந்த அனைவரும் கவலை அடைந்துள்ளோம். அவருக்காக சிறப்புப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
போலீஸார் விசாரணை:
இதனிடையே பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் தங்கியிருந்த பெஸ்கி இல்லத்தில் திண்டுக்கல் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வனிதா, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications