ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவு திரட்டும் இந்திய அமெரிக்கர்கள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஹிலரி க்ளின்டனுக்கு ஆதரவு திரட்ட தனி அமைப்பு தொடங்கியுள்ளனர் அமெரிக்க வாழ் இந்தியர்கல்.
இதற்காக ஹிலரி க்ளின்டனுக்கான அமெரிக்க இந்தியர்கள் (INDIAN AMERICANS FOR HILLARY CLINTON - IAFHC) என்ற அமைப்பினை அமெரிக்காவில் மேரிலாந்து மாநிலத்தில் வசிக்கும் டாக்டர் ராஜன் நடராஜன் தொடங்கியுள்ளார்.

டாக்டர் ராஜன் நடராஜன்தலைமையில் அமெரிக்கா முழுவதும் இந்திய வம்சாவளியில் தோன்றி வசிப்பவர்களும், புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும், 30-க்கும் மேற்பட்ட பல்வேறு சங்கங்களும் ஒருங்கிணைந்து, இந்த அமைப்பின் தொடக்க விழாவினை நடத்த உள்ளார்கள்.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள ராக்வில் என்ற நகரில் மாண்ட்கோமரி கல்லூரி அரங்கத்தில், ஏப்ரல் 24ந்தேதி இத் தொடக்க விழா விமரிசையாக நடக்க உள்ளது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக, ஹிலரி கிளிண்டனின் தேசிய தேர்தல் கமிட்டி தலைவரான ஜான் பொடஸ்டா கலந்து கொண்டு பேசுகிறார். ஹிலரி கிளிண்டனின் முன்னாள் ஆலோசகரான நீரா டாண்டனும் இந்த விழாவில் பங்கேற்கிறார். இவர்கள் மட்டுமன்றி, அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்ட மற்றும் நகர அரசுகளில் முக்கிய அங்கங்கள் வகிக்கும் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவு அளிக்க,
இவ் விழாவிற்கு பெருந்திரளாக இந்திய அமெரிக்கர்கள் மட்டுமல்லாது, அங்கு வாழும் அமெரிக்கர்களும் வந்து கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஏன் இந்த அமைப்பு?
"ஹிலரி கிளிண்டன் இந்தியர்களின் பால் மிகுந்த அன்பு கொண்டவர். பலமுறை இந்தியாவிற்கு அவர் மேற்கொண்ட விஜயங்களின் போது அந்த அன்பை வெளிக்காட்டி நெகிழ வைத்துள்ளார். அமெரிக்கவாழ் இந்தியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் விளங்குகிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கும் அது மிகப் பெரிய பலமாக அமையும்.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில், மிகப் பெரிய சக்தி கொண்ட சமுதாயமாக இந்திய அமெரிக்கர்கள் சமுதாயம் விளங்குகிறது என்று ஹிலரி கிளிண்டனே சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளு குறிப்பிடத்தக்கது.
இந்திய அமெரிக்கர்களில் பெரும்பாலானோர் (65%) ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். ஆகவே இந்திய அமெரிக்கர்களின் மொத்த ஆதரவைத் திரட்டி, ஹிலரி கிளிண்டன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் பதவியில் அமர்த்தப் பாடு படும் அமைப்பாக இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது", என்று இவ்வமைப்பினைத் தொடங்கியுள்ள டாக்டர் ராஜன் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்த அமைப்பு அமெரிக்கா முழுவதிலும் வாழும் இந்திய அமெரிக்கத் தன்னார்வலர்களின் ஒரு அமைப்பாகவும், இந்தத் தேர்தலில் ஹிலரி கிளிண்டன் அவர்களுக்குப் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டும் ஒரு அமைப்பாகவும் திகழும்," என்றும் கூறியுள்ளார்.
டாக்டர் நடராஜன், அமெரிக்காவின் சாதனைத் தமிழர் எனலாம். கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் மேரிலாந்து மாநில வெளியுறவுத் துறைத் துணைச் செயலராக (அமைச்சராக) அம் மாநில கவர்னர் ஓமேலியால் நியமனம் பெற்றவர். அமெரிக்காவில் ஒரு மாநில அரசின் இத்தகைய உயர் பதவி வகிக்கும் முதல் தமிழர் என்ற பெருமையையும், மேரிலாந்து மாநிலத்தில் இத்தகைய உயர்பதவி வகிக்கும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது மேரிலாந்து மாநில போக்குவரத்து ஆணையர் பதவியில் பணி புரிகிறார்.
-கோபிநாத், வாஷிங்டன்












Click it and Unblock the Notifications