மலேசியாவுக்கு ரூ. 1.82 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்திய இந்தியர் கைது
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு 5.34 கிலோ எடை கொண்ட போதை பொருள் கடத்திய இந்தியர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் என மதிப்பிடப் பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூர் வந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞரின் நடவடிக்கையில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை சோதனை செய்த அதிகாரிகள், அவருடைய பெட்டி உள்ளிட்ட பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவரிடம் 5.34 கிலோ எடை கொண்ட சுமார் ஒரு கோடியே 82 லட்சம் ருபாய் மதிப்புடைய மெதம்பிடமைன் என்ற போதை மருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இத்தகவலை சுங்கத்துறை இயக்குனர் தாதக் சிக் ஒமர் சிக் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் கைது செய்யப்பட்ட நபர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் 18 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 111 கோடியே 33 லட்சம் ரூபாய்) மதிப்புடைய 347 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications