இந்திய இளைஞர் கனடாவில் சுட்டுக் கொலை - ஒருவர் படுகாயம்
டோரன்டோ: கனடா நாட்டில் இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவரது நண்பர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கனடாவில் உள்ள கால்கெரி நகரில் கடந்த 11 ஆம் தேதி சாலையோரம் கார் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள், கார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கார் கதவை திறந்து பார்த்தபோது அதற்குள்ளே 2 இளைஞர்கள் காயங்களுடன் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இளைஞர்களில் ஒருவர் இறந்து விட்டதாகவும், மற்றொருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் யார் என்ற விவரம் கடந்த 14 ஆம் தேதி தான் தெரியவந்துள்ளது. அவரது பெயர் ஸ்டீவன் ஷார்தா. அவர் கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளைஞர் என தெரியவந்துள்ளது.
மேலும் இவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாலும், அவருக்கு இன்னும் நினைவு திரும்பாததாலும் அவர் யார் என்பதும், இந்த சம்பவம் எப்படி நடந்தது, அவர்களை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பதும் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி டஹ் அன்ட்ரூஸ், "இந்த சம்பவத்தை பார்க்கும் போது அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்று நம்புகிறோம். காயமடைந்தவருக்கு இந்த தாக்குதலில் ஈடுபட்டது யார் என்பது தெரியும். இருப்பினும் சிகிச்சை பெற்று வருபவர் உடல்நிலை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த ஒத்துழைப்பதாக இல்லை.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை வைத்தும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை கண்டு பிடித்துவிட முடியும்.
அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் இதுபோன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதுவரை நடந்த சம்பவங்களில் ஷார்தா சுட்டுக்கொல்லப்பட்டது 13 ஆவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications