ஆப்கானில் இந்திய தூதரகம் மீது தலிபான் தாக்குதல்!- மோடியுடன் அதிபர் கர்சாய் ஆலோசனை!!
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய 4 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமராக பொறுப்பேற்கும் மோடி., ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரை தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா வர விரும்பினாலும் அந்நாட்டு ராணுவம் தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது இன்று திடீர் என்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஈரான் எல்லையில் உள்ள ஹெராத் நகரத்தில் உள்ள துணை தூதரகத்துக்குள் உள்ளே நுழைய முயன்ற தலிபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தூதரகத்தை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ- திபெத் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அவர்களுடன் ஆப்கானிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
இருதரப்புக்கும் இடையே பல மணிநேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 4 தலிபான்கள் தீவிரவாதிகள் சுட்டுப் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கண்டனம்- தூதருடன் மோடி ஆலோசனை
இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதரை தொடர்பு கொண்ட பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி, அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன் முழுமையான கூடுதல் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
இதனிடையே நரேந்திர மோடியை தொடர்பு கொண்ட ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து நிலைமையை விவரித்தார்.
கண்டனம்
மேலும் தமது ட்விட்டர் பக்கத்தில் ஆப்கான் தூதர தாக்குதலுக்கு பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் பாகிஸ்தானும் இந்திய தூதரகம் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications