எவரெஸ்டில் ஏறியதாக பொய் சொன்ன இந்திய தம்பதி: 10 ஆண்டுகள் தடை விதித்தது நேபாளம்
காத்மாண்டு: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த தினேஷ்-தாரகேஸ்வரி ரதோட் தம்பதியர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக புகைப்படம் எடுத்து நேபாள அரசிடம் சமர்ப்பித்தனர்.

இந்த புகைப்படத்தை உண்மையென்று நம்பிய நேபாள அரசு தம்பதியர் மலையேறியதாக சான்றிதழ் அளித்தது. ஆனால், 'அவை, கம்ப்யூட்டர் மென்பொருள் உதவியுடன் திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள்' என, சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர்;
இதைத்தொடர்ந்து விசாரணை செய்த நேபாள சுற்றுலாத் துறை, இருவரின் மலையேறும் புகைப்படமும் போலியானது என்பதைக் கண்டறிந்தது. அத்துடன், அந்த தம்பதியர் மலையேறிய சான்றிதழை ரத்து செய்ததுடன், 10 ஆண்டுகள் இருவரும் மலையேறத் தடை விதித்துள்ளது.
இதுபற்றி நேபாள சுற்றுலாத்துறையின் தலைவர் சுதர்சன் பிரசாத் தக்கல் கூறும்போது, 'இந்திய தம்பதிகள் இருவரும் வேறு ஒரு இந்திய தம்பதியினரின் புகைப்படத்தில் தங்கள் படங்களை ஒட்ட வைத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு இருவரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை பிற பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications