இரவு வானத்தை பகலாக மாற்றிய ஏவுகணைகள்! இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம்.. இந்தியர்களுக்கு எச்சரிக்கை
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. இதில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இந்த மோதலில் ஈரான் உள்ளே நுழையவில்லை. ஆனால், ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த சில தினங்களாக லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்திருக்கிறது. இது ஈரானை டென்ஷன் ஆக்கிவிட்டது. எனவே, இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.

நேற்றிரவு மட்டும் சுமார் 400 ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஈரான் வீசியிருக்கிறது. இதில் 90% ஏவுகணைகள் இலக்குகளை சரியாக தாக்கியிருப்பதாக ஈரான் கூறியிருக்கிறது. இஸ்ரேலை பதம்பார்த் ஏவுகணைகள் அனைத்தும் ஹைபர் சோனிக் வகையை சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் இந்த ஏவுகணைகள் தாக்கும். இதை இடைமறித்து அழிப்பது சாத்தியமில்லை. எனவேதான் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்கின்றன.
இதனால் இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. "இந்தியா்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், அந்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். அவசரநிலை ஏதும் ஏற்பட்டால் +972-547520711, +972-543278392 ஆகிய எண்ணை தொடர்பு கொள்ளவும்" என கூறியிருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து இஸ்ரேலில் கூலி வேலைகளை செய்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் சுமார் 40,000 பேர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படனர். எனவே கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கியது. இதனைடுயடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை, பிரதமர் மோடி சந்தித்த போது இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி, இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உத்தரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 20,000 தொழிலாளர்கள் இஸ்ரேலில் இப்போது வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்களின் நிலை தற்போது நெருக்கடியில் இருக்கிறது. போரால் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications