"மிஸ் வேர்ல்ட்" மனுஷி சில்லார்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகிக்குப் பட்டம்! #missworld2017
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
Recommended Video

பீய்ஜிங் : ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் இந்தப் பட்டத்தை பெற்றுள்ளார்.
108 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற உலக அழகி போட்டி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இதில் இன்று வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மனுஷி சில்லார் 2017ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை பெற்றதையடுத்து அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.
மருத்துவ மாணவியான மனுஷி ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர் மருத்துவர்கள். மனுஷியின் தந்தை டாக்டர் மித்ரா பாசு சில்லார் டிஆர்டிஓவில் விஞ்ஞானியாக உள்ளார். இவரின் தாய் டாக்டர் நீலம் சில்லார் நியூரோ ஹெமிஸ்ட்ரி துறையின் பேராசிரியர்.

மருத்துவ மாணவி
சோனிப்பேட்டையில் பகத் பூல் சிங் பெண்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் மனுஷி மருத்துவம் படித்து வருகிறார். இவர் குச்சிப்புடி நடனத்தில் சிறப்பு பெற்றவர். கடந்த ஜுன் மாதத்தில் மனுஷி பெமினா மிஸ் இந்தியா போட்டியில் ஹரியானா மாநிலம் சார்பாக போட்டியிட்டார். அந்த போட்டியில் மிஸ் போடோஜெனிக் பட்டத்தை மனுஷி பெற்றுள்ளார்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய மனுஷி
இதனைத் தொடர்ந்து மிஸ் வேல்ட் 2017க்கான இறுதிப் போட்டியாளர்களில் டாப் மாடலாக மனுஷி இடம்பெற்றார். அழகு, மக்களின் தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை மனுஷி நிரபித்துள்ளார். மாதவிடாய் சுகாதாரம் என்னும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மனுஷி 20 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து சுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

பட்டம் வெல்லும் 6வது பெண்
17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர் உலக அழகி பட்டத்தை பெற்றுள்ளார். உலக அழகி பட்டத்தை பெறும் 6வது பெண் மனுஷி சில்லார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்ற இந்திய அழகி ரீட்டா ப்ரியா ஆவார். இவர் 1966ம் ஆண்டு இப்பட்டத்தை வென்றார். அதன் பின்னர் 1994ல் ஐஸ்வர்யா ராய், 1997ல் டயானா ஹெய்டன், 1999ல் யுக்தா முகி ஆகியோர் மிஸ் வேல்டு பட்டம் வென்றனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
2000வது ஆண்டில் பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் ஆனார். அதன் பின்னர் இந்திய அழகிகள் யாரும் கடந்த 17 வருடமாக பட்டம் பெறவில்லை. தற்போது மனுஷி இந்த இடைவெளியை நிரப்பியுள்ளார்.

மனுஷி மகிழ்ச்சி
உலக அழகி பட்டம் வென்றது குறித்து மேடையில் பேசிய மனுஷி "தனக்கு மிகப்பெரும் ஊக்கமாக இருந்த தாய்க்கு நன்றி தெரிவித்தார். வாழ்வில் பணம் ஒரு பொருட்டே அல்ல அன்பும், மரியாதையுமே முக்கியம், இதற்கு சரியான உதாரணம் அம்மா தான்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications