சிரியாவில் 3 இந்திய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பலி
டெல்லி: சிரியாவில் போரிடுகையில் இந்தியாவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேர் பலியாகியுள்ளனர் என்று உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பட்கலைச் சேர்ந்தவர் சுல்தான் அர்மார். அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அன்சர் உல் தவ்ஹிதில் சேர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் சிரியாவில் உள்ள கோபேன் நகரில் அர்மார் கொல்லப்பட்டதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்களான ஷமீம் தான்கி மற்றும் அபு அப்துல்லா என்ற டாக்டர் ஷாநவாஸ் ஆலம் ஆகிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் போரிடுகையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை உளவுத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யாணில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றவர் தான்கி.

கடைசி வார்த்தை
குப்பார்களின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க மறக்காதீர்கள். குஜராத் மற்றும் முசாபர்நகர் கொலைகளை நினைக்கையில் என் கண்களில் கண்ணீர் வருகிறது என்பது தான் அர்மாரின் கடைசி வார்த்தைகள்.
அர்மார்
உளவுத் துறை, தேசிய புலனாய்வுத் துறை மற்றும் பெங்களூர் போலீசாரால் தேடப்பட்டு வந்த அர்மார் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இருந்து வெளியேறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தார். அவர் அன்சார் உல் தவ்ஹீத் அமைப்பை உருவாக்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை எடுத்து வந்தார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருவதாக உளவுத் துறை நினைத்தது. ஆனால் அவர் சிரியா சென்றது அண்மையில் தான் தெரிய வந்தது. பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் அர்மாரும், டாக்டர் ஷாநவாஸும் ஐஎஸ்ஐஎஸ்ஸின் இந்த் முகாமில் போரிடுகையில் பலியாகினர்.

ஷாநவாஸ்
2008ம் ஆண்டு டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் டாக்டர் ஷாநவாஸ். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இருந்த அவர் டெல்லி போலீசார் பத்லா ஹவுஸில் சோதனை நடத்தியபோது அங்கிருந்து தப்பியோடி நாட்டைவிட்டு வெளியேறினார்.
அவர் ஷார்ஜாவில் இருப்பதாக நினைக்கையில் அவர் எப்பொழுது சிரியா சென்றார் என்று தெரியவில்லை. சிரியாவில் அவருக்கு அபு அப்துல்லா என்ற பெயர் கிடைத்துள்ளது. அர்மார் உதவியுடன் தான் ஷாநவாஸ் ஐஎஸ்ஐஎஸ்ஸில் சேர்ந்துள்ளார். அவர் சிரியாவின் கோபேன் நகரில் பலியாகியுள்ளார்.
ஷமீம்
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர நாட்டைவிட்டு வெளியேறிய 4 வாலிபர்களில் ஷமீம் தான்கியும் ஒருவர். அவருடைய நண்பர் ஆரீப் மஜீத் வேலைப்பளுவை தாங்க முடியாமல் இந்தியாவுக்கு திரும்பி வந்துவிட்டார். மற்ற 3 பேரும் சிரியாவிலேயே தங்கிவிட்டனர். தான்கி மற்றும் அவரது நண்பர்களுக்கு கழிப்பறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகள் அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் கோபேன் நகருக்கு மாற்றப்பட்ட தான்கி உள்ளிட்டோர் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியர்கள்
சிரியாவில் மேலும் 7 இந்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக போராடி வருகிறார்கள். அவர்களின் விவரங்களை பெற உளவுத் துறை அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications